சென்டிமென்ட் உடைத்த வைகோ... வேட்புமனுதாக்கல் செய்யும் முன் காமராஜருக்கு மரியாதை
விருதுநகர்: லோக்சபா தேர்தலில் மதிமுக பொதுச்செயலர் வைகோ விருதுநகர் தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. மதிமுகவுக்கு விருதுநகர் உட்பட 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று பகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனும் உடன் சென்றார்.
அதேபோல் தென்காசி ம.தி.மு.க. வேட்பாளர் சுதன் திருமலைக்குமார் நெல்லை மாவட்ட வருவாய் அதிகாரி உமாமகேஸ்வரியிடம் வேட்புமனுதாக்கல் செய்தார். தூத்துக்குடி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் ஜோயல் இன்று தூத்துக்குடி ஆட்சியர் ரவிக்குமாரிடம் வேட்பு மனு கொடுத்தார்.

காமராஜருக்கு மரியாதை
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வைகோ வேட்புமனு தாக்கல் செய்யும் முன் விருதுநகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் இல்லம் சென்று அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

சென்டிமென்ட் தகர்ப்பு
இதுவரை வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யும் முன் காமராஜர் இல்லத்திற்குப் போனதில்லை. முதன்முறையாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காமராஜருக்கு மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதிமுகவினர் உற்சாகம்
வைகோ வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது ஏராளமான மதிமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

ராகுகாலம்… ஏப்ரல் 1
வைகோ தனது பிரசாரத்தை ஞாயிறன்று 4.30 மணிக்கு தொடங்கினார். ஞாயிறு மாலை 4.30 முதல் 6.30 மணிவரை ராகுகாலம். இன்றைக்கு ஏப்ரல் 1ம் தேதி செவ்வாய்கிழமை வேறு அந்த சென்டிமென்ட் எதையும் கவனத்தில் கொள்ளாமல் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications