கருணைக்கும் சகிப்புத்தன்மைக்கும் இலக்கணமானவர் இயேசு பிரான்: வைகோ கிறிஸ்துமஸ் வாழ்த்து
சென்னை: கொலைகளும், படுகொலைகளும், பஞ்சமா பாதகங்களும் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற இன்றைய நிலையில், இயேசு பெருமானின் மனிதநேய அமுத மொழிகள் தமிழ்நாட்டுக்கு இன்றியமையாத தேவையாகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப் பட உள்ள நிலையில் கிறிஸ்தவ பெருமக்களுக்கு வைகோ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:
ஆதி அந்தம் இல்லாத கால ஓட்டத்தை கிறிஸ்துவுக்கு முன்பும், கிறிஸ்துவுக்குப் பின்பும் என வரையறுக்கும் உன்னதமான நாள்தான் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளாகும். அளவிட முடியாத கருணைக்கும், சகிப்புத் தன்மைக்கும் இலக்கணமான இயேசு பெருமான், தான் சித்திரவதைக்கு உள்ளானபோதும், கல்வாரியில் அவரது சிரசில் முள்முடி சூட்டி, சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்திய போதும் தன்னைக் கொடுமைப்படுத்தியவர்களையும் மன்னிக்கச் சொன்ன அவரது தியாகப் பண்பு மனிதகுலத்துக்கு வழிகாட்டுகின்ற ஒளியாகும்.
மலைப் பிரசங்கத்தில் அவர் செய்த உபதேச மொழிகள் துன்பப்படுகிறவர்களுக்கு மாமருந்தாகும். பகையும் வெறுப்பும் வளர்ந்து, கொலைகளும், படுகொலைகளும், பஞ்சமா பாதகங்களும் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற இன்றைய நிலையில், இயேசு பெருமானின் மனிதநேய அமுத மொழிகள் தமிழ்நாட்டுக்கு இன்றியமையாத தேவையாகும்.
அன்பையும், கனிவையும் பரிமாறும் நேசர்களான கிறித்துவப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications