ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 8ம் தேதி ராம்ஜெத்மலானிக்கு பாராட்டு விழா நடத்தும் வைகோ
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்தாக காரணமாக இருந்த மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானிக்கு பாராட்டு விழா நடத்த மதிமுக முடிவு செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.

இதனையடுத்து இவர்கள் மூன்று பேர் மற்றும் இந்த வழக்கில் சிக்கியுள்ள மேலும் 4 பேர் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றம் சென்று இடைக்கால தடை பெற்றது.
ஆனால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு கயிற்றை தனது வாதத் திறைமையால் நீர்த்துபோக வைத்தவர் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி. இந்த வழக்கை ராம்ஜெத்மலானி கையாள காரணமாக இருந்தவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
இந்த நிலையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை குறைத்ததற்காகவும், தமிழர்களுக்கு நீதி பெற்று தந்ததிற்காகவும், மார்ச் 8ம் தேதி அன்று சென்னையில் ராம்ஜெத்மலானிக்கு மதிமுக சார்பில் பாராட்டு விழா நடத்த வைகோ முடிவு செய்துள்ளார். பாராட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை வைகோ தனது நேரடி பார்வையில் கவனித்து வருகின்றாராம்.












Click it and Unblock the Notifications