மது விலக்கை வலியுறுத்தி மதிமுகவின் மாரத்தான்.. வைகோவும் பங்கேற்று ஓடினார்!
சென்னை: மதிமுக சார்பில் இன்று மது விலக்கை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் சென்னையில் நடந்தது. இதில் கட்சி பொதுச் செயலாளர் வைகோவும் கலந்து கொண்டு ஓடினார்.
மதுப்பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்ற மன நிலையை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இன்று காலை 6.30 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலை அருகே சிவானந்தா சாலையில் தொடங்கி மெரினா கடற்கரை வழியாக கலங்கரை விளக்கம் (லைட் ஹவுஸ் ) அருகே நிறைவு பெற்றது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த மாரத்தான் ஓட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில், 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும் மற்றும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ மாணவியர் ஏழு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.
பெருமளவிலான மாணவ, மாணவியர் இந்த ஓட்டத்திற்குத் திரண்டு வந்திருந்தனர். அனைவரும் ஆர்வத்தோடு இதில் கலந்து கொண்டு ஓடினர். மது விலக்கை வலியுறுத்தி மதிமுகவின் மாரத்தான்.. வைகோவும் பங்கேற்று ஓடினார்! மாணவர்களோடு மதுவிலக்கு மராத்தான் ஓட்டத்தில் இணைந்து கொண்டு வைகோவும் ஓடினார். மங்கி கேப், சிவப்பு நிற டி சர்ட், கருப்பு நிற பேன்ட் போட்டு போட்டியில் கலந்து கொண்டார் வைகோ.
கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆண்கள் (25 வயதுக்குள்), கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் (25 வயதுக்குள்), பள்ளி மாணவர்கள் 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை, பள்ளி மாணவிகள் 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை, பள்ளி மாணவர்கள் 6-ஆம் வகுப்பு மற்றும் 7-ஆம் வகுப்பு, பள்ளி மாணவர்கள் 8-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு, பள்ளி மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை என்று 7 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில், ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஓடினர்.
5 கி.மீ. தொலைவுக்குள் பல இடங்களில் தேவைப்படும் முதலுதவி வழங்க மருத்துவர்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் சேவை புரியும் வகையில் மதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனைத்துப் போட்டிகளும் நிறைவு பெற்றதும் 7 பிரிவுகளில் வெற்றி பெற்ற 35 நபர்களுக்கும் மதிமுக பொதுச்செயலார் வைகோ பரிசுத் தொகை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ. 25,000/- இரண்டாம் பரிசு ரூ. 15,000/- மூன்றாம் பரிசு ரூ. 10,000/- நான்காம் பரிசு ரூ. 7,000/- மற்றும் ஐந்தாம் பரிசு ரூ. 5,000/- வீதம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.. மேலும் போட்டியில் பங்கேற்று நிறைவு செய்த அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.