பண்டிட் ரவிசங்கர் குருஜியுடன் வைகோ சந்திப்பு
மதுரை: வாழும் கலை அமைப்பின் தலைவர் பண்டிட் ரவிசங்கர் குருஜியை மதுரையில் இன்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து பேசினார்.
ம.தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மதுரை பசுமலையில் தங்கியிருந்த பண்டிட் ரவிசங்கர் குருஜியை இன்று வைகோ காலை 9.30 மணிக்கு சந்தித்து, அவருக்கு பூங்கொத்து வழங்கினார். பண்டிட் ரவிசங்கர் குருஜி வைகோவுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இருவரும் 45 நிமிடம் தனிமையில் நாட்டு நிலைமைகள் குறித்தும், ஈழத் தமிழர்கள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

வாழும் கலை அமைப்பு உலகில் 180 நாடுகளில் இருக்கிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்த அமைப்பு நதிநீர் ஆதாரங்களை வளப்படுத்துதல், நோயுற்றுவர்களுக்கு சிகிச்சை தருதல், உடல் நலம் காக்க மூச்சு பயிற்சி கொடுத்தல், பழங்குடி மாணவர்களுக்கு இலவச பள்ளிகள் நடத்துதல் போன்ற மனிதநேய சேவை செய்து வருகிறது.
இதனுடைய தலைவர் பண்டிட் ரவிசங்கர் குருஜி, ஈழத் தமிழர்களின் துயர் துடைக்க நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில், 2008 ஏப்ரலில் தெற்கு ஆசிய அமைதி மாநாட்டை நடத்தினார்.
அதில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்றனர். இலங்கையில் இருந்து புத்த பிட்சுகளும், அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமானும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயலத் ஜெயவர்த்தனேயும் கலந்துகொண்டனர்.தமிழர்களின் பிரதிநிதியாக வைகோ மட்டும் பங்கேற்றார். இதில் நார்வே அரசு அமைச்சர்களும் கலந்துகொண்டனர். இவ்வாறு மதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications