கருணாநிதியின் கண்ணீர் துளியிலும் புன்னகையிலும் ஆயிரம் செய்திகள் இருக்கின்றன - வைகோ உருக்கம்
கருணாநிதியின் கண்ணீர்துளியிலும் புன்னகையிலும் ஆயிரம் செய்திகள் இருக்கின்றன என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை: என் கையை பற்றிக்கொண்டார் கருணாநிதி. அவரின் புன்னகையிலும், கண்ணீர் துளியிலும் ஆயிரம் செய்திகள் இருக்கின்றன என்று என்று வைகோ கூறியுள்ளார்.
வயது முதிர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை உணவு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கருணாநிதியை சந்தித்து பேசி நலம் விசாரித்து வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கருணாநிதியை நேரில் சந்தித்தார். அப்போது, கருணாநிதி தம்மை அடையாளம் கண்டு கொண்டதாகவும் பேச முயற்சித்தார் எனவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
வைகோ - கருணாநிதி சந்திப்பு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று கோபாலாபுரம் சென்று கருணாநிதியை சந்தித்து பேசினார். அப்போது உணர்ச்சிகரமான கட்சிகள் அரங்கேறின. வைகோவும் கருணாநிதியும் ஒருவரை ஒருவர் கைகளைப் பற்றிக்கொண்டனர். அப்போது துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.
கருணாநிதியின் நிழல்
கருணாநிதி உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்டார். திமுகவில் இருந்த போது நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்தார். என்னை தம்பி வைகோ என முதன் முதலில் அழைத்தவர் 'அண்ணன்' கருணாநிதி. 29 ஆண்டுகள் கருணாநிதியின் நிழலாக இருந்தேன் என்றார். கருணாநிதியின் துரும்பு விழ கூட நான் அனுமதிக்கவில்லை.
கையை பற்றிய கருணாநிதி
என் கையை பற்றிக் கொண்டார் கருணாநிதி. கருணாநிதி என் கையை விடவே இல்லை... பேச முயற்சித்தார், எனக்கு கண்ணீர் வந்தது... கருணாநிதியின் கண்களில் கண்ணீர் வந்தது. இதை சொன்னபோது வைகோவின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.
கனவில் வந்த கருணாநிதி
எனது கனவில் 2 மாதங்களாக கருணாநிதி வந்து போகிறார். தயாளு அம்மாள் என்னை அடையாளம் கண்டுகொண்டார். கருணாநிதியிடம் போய் வருகிறேன் என்ற போது புன்னகைத்தார். கருணாநிதியின் கண்ணீர்துளியிலும் புன்னகையிலும் ஆயிரம் செய்திகள் இருக்கின்றன என்று வைகோ கூறினார்.
முரசொலி பவள விழா
கருணாநிதி முழுமையாக நலம்பெற்று கம்பீர குரலில் உரையாற்றுவார், முரசொலியின் பவளவிழாவில் நான் உரையாற்றுவேன் என்று கூறினார்.
முரசொலியின் பவளவிழாவில் வைகோ உரையாற்றுகிறார் என ஸ்டாலின் செய்தியாளர்களிடம் சொன்னபோது புன்னகைத்தார் வைகோ.
நீண்ட நாட்களுக்குப் பின் சந்திப்பு
திமுக உடன் கூட்டணியை முறித்துக்கொண்ட பின்னர் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் வைகோ. அதன்பிறகு திமுக மதிமுக இடையே அறிவிக்கப்படாத பனிப்போரே நிலவியது. மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் பலர் திமுகவில் இணைந்தனர். இதனால் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார் வைகோ. கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக உடன் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாக அறிவித்து தனி கூட்டணி அமைத்தார் வைகோ. நீண்ட நாட்களுக்குப் பிறகு வைகோ இன்றைக்கு கோபாலாபுரம் சென்று கருணாநிதியை சந்தித்து உணர்ச்சி பெருக்கோடு திரும்பியுள்ளார்.