மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் கை வைத்தால் அதிமுக அரசு சுடுகாட்டுக்கு செல்லும்- வைகோ
மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் உள்ள மூலக்கொத்தளம் சுடுகாட்டில் கைவத்தால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி சுடுகாட்டுக்குச் செல்லும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை: மூலக்கொத்தளம் சுடுகாட்டின் மீது கை வைத்தால் உங்கள் அதிகாரம் சுடுகாட்டிற்கு செல்லும் என்று மதிமுக பொதுச்செயலாளர் எச்சரித்துள்ளார். கட்சிபாகுபாடின்றி மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் கூறியுள்ளார்.
வட சென்னைப் பகுதியில் அமைந்துள்ள மூலக்கொத்தளம் சுடுகாட்டில் மொழிப்போர் தியாகிகளான நடராசன், தாளமுத்து ஆகியோரின் நினைவிடங்கள் உள்ளன. குடியிருப்புகள் கட்டுவதற்காக அந்த சுடுகாட்டை அகற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைக் கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போராட்டம் அறிவித்துள்ளார்.
இன்று சென்னை மூலக்கொத்தளம் சுடுகாட்டிற்கு வந்த வைகோ அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சுடுகாடு 300 - 400 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு 1938-ல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நடராஜன் கல்லறை மற்றும் தாளமுத்து நடராஜன், முத்துக்குமாரின் எரியூட்டப்பட்ட நினைவிடம் உள்ளது.
தமிழக அரசு சார்பில் குடிசை மாற்று வாரியம் மூலம் குடியிருப்புகள் கட்டுவதற்கு ஆரம்ப கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட சுடுகாட்டை 4 ஏக்கர் கையகப்படுத்தி முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளை அரசு தொடருமேயானால் 10 ஆயிரம் பேரை ஒன்று திரட்டி போராட்டத்தை நடத்துவேன்.
இந்த சுடுகாட்டில் உள்ள மைதானத்தில் விளையாடிய மாணவர்கள், மாநில, தேசிய அளவில் வீரர்களாக உருவாகி உள்ளனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு எஸ்.சி- எஸ்.டி. கமிஷனின் ஆணையத்தில் உள்ளது. தொடர்ந்து காவல்துறையினரால் இங்குள்ள மக்கள் மிரட்டுப்படுகிறார்கள்.
போராட்டம் நடத்துபவர்களை வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறார். நான் மக்களை தூண்டி விடுவதாக கூறுகிறார்கள். மக்களை திரட்டி போராடும் போது முடிந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கட்டும். கிராமத்தில் உள்ள இடுகாட்டினை அகற்ற முடியுமா? எந்த அதிகாரியாவது இடிக்க போய் விட்டு திரும்பி வரமுடியுமா?
இந்த பகுதியை இடிக்க வரும் இயந்திரத்திற்கும், கொண்டு வருபவர்களுக்கும் ஆபத்து. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தவறு செய்து கொண்டு வருகிறீர்கள். சுடுகாட்டின் மீது கை வைத்தால் உங்கள் அதிகாரம் சுடுகாட்டிற்கு செல்லும். கட்சிபாகுபாடின்றி மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன்.
எடப்பாடி பழனிசாமி திராவிட இயக்கத்துக்கு கேடு விளைவிக்கிறார். ஆதி திராவிட குடியிருப்பு என சொல்கிறார்கள். இதே இடத்தில் அமைச்சர்கள் இருப்பார்களா? என்றும் வைகோ கேட்டார்.
எடப்பாடி பழனிச்சாமி திராவிட இயக்கத்திற்கு கேடாக இருப்பதாகவும் வைகோ கூறியுள்ளார்.