தொடங்கியது மக்கள் நலக் கூட்டணியின் பிரசாரம்.. கடலூரிலிருந்து!
கடலூர்: தமிழகத்தில் புதிதாக அணி அமைத்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் இன்று தங்களது கூட்டணியின் பிரசாரத்தை கடலூரில் தொடங்கினர்.
திமுக, அதிமுக கூட்டணிக்கு மாற்று நாங்கள்தான் என்ற முழக்கத்துடன் மக்கள் நலக் கூட்டணி உருவாகியுள்ளது. மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திருமாளவனின் விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.
தேமுதிகவை தங்களது கூட்டணிக்கு இக்கூட்டணியின் தலைவர்கள் தொடர்ந்து அழைத்தபடி உள்ளனர். ஆனால் விஜயகாந்த் எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் இருக்கிறார்.
தாயகத்தில் ஆலோசனை
இந்த நிலையில், மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை மதிமுக அலுவலகமான தாயகத்தில் நேற்று இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் பொதுக்கூட்டம்
இதைத் தொடர்ந்து நேற்று இரவு புதுச்சேரியில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் பேசினர். இன்று சட்டசபைத் தேர்தல் பிரசாரம் தொடங்கியது.
கடலூரில் பிரசாரம் தொடக்கம்
இன்று காலை 10 மணியளவில் கடலூரில் பிரசாரம் தொடங்கியது. வைகோ உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இரவு நாகையில்
தொடர்ந்து பிற்பகலில் சிதம்பரத்திலும், பின்னர் மயிலாடுதுறையிலும் தலைவர்கள் பிரசாரம் செய்து பேசினார்கள். இன்று இரவு நாகப்பட்டனத்தில் முதல் நாள் பிரசாரம் நிறைவடைகிறது.
ஆயிரக்கணக்கில் தொண்டர்கள்
முதல் நாள் பிரசாரத்திற்கு ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டு வந்து தலைவர்களின் பேச்சைக் கேட்டது மக்கள் நலக் கூட்டணியினருக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. சுள்ளென அடித்த வெயிலிலும் கூட தொண்டர்கள் கலையாமல் வைகோ உள்ளிட்டோரின் பேச்சுக்களைக் கேட்டது கூட்டணியினருக்கு தெம்பை அளித்துள்ளது.
Posted by Vaiko on Sunday, February 7, 2016
தாகத்திற்கு இளநீர்
பிரசாரத்திற்கு இடையே சாலையோரத்தில் இருந்த ஒரு இளநீர்க் கடையில் வாகனங்களை நிறுத்தி வைகோ உள்ளிட்ட தலைவர்கள் இளநீர் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.