120 சீட்... 'கிங்' வேட்பாளர்... விஜயகாந்துக்கு மாசி மாத "ஆபர்" தரும் மக்கள் நலக் கூட்டணி!
சென்னை: விஜயகாந்தை 'கிங்' ஆக ஏற்றுக்கொள்ள பாஜக தயாராகி வரும் நிலையில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களும் தேமுதிகவிற்கு 120 தொகுதிகளும், முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை ஏற்றுக்கொள்ளவும் முடிவு செய்து விட்டதாகவே கூறப்படுகிறது. இதனை உறுதிபடுத்தும் விதமாகவே திருச்சி பொதுக்குழு கூட்டத்தில் பேசிய வைகோவும் தொண்டர்களுக்கு உணர்த்தியுள்ளார்.
1994ம் ஆண்டு மே 6ம் தேதி திமுகவில் இருந்து பிரிந்த வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்க கழகத்தை ஆரம்பித்தார் அவருடன் திமுகவில் இருந்து ஒன்பது மாவட்டச்செயலாளர்களும் 400க்கும் மேற்பட்ட பொதுக் குழு உறுப்பினர்களும் சென்னையில் நடிகர் சங்க கட்டிடத்தில் கூடி புதியக்கட்சியின் பொதுச்செயலாளராக வைகோவை தேர்தெடுத்தனர் அதற்கான அச்சாராம் திருச்சி அருண் ஹோட்டலில் கூடி எடுக்கப்பட்டது.
இதனையடுத்து திருச்சி என்றாலே திருப்புமுனை என அரசியல் பிரபலங்கள் கூற ஆரம்பித்தனர், அதன்பின்னர் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ள வைகோ திருச்சி வந்திருந்தாலும் மீண்டும் திருச்சியில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் பொதுக்குழுவை கூட்டினார்.
திருச்சி மன்னார்புரத்தில் கடந்த 24ம் தேதி காலை 10 மணிக்கு பொதுக்குழு கூடியது. கூட்டத்தில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, அதில் திமுகவும் அதிமுகவும் ஊழல் கட்சிகள் என்பதை வலியுறுத்தியே பெரும்பாலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.
இறுதியாக மக்கள் நலக்கூட்டு இயக்கம் மக்கள் நலக்கூட்டணியாக 2015 நவம்பர்மாதம் 2ம் தேதி பிரகடனப்படுத்தப்பட்டது இதற்கு வருகின்ற சட்டசபைத் தேர்தலில் தமிழக மக்கள் ஆதரவு தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

பொதுக்குழு தீர்மானம்
திமுக அதிமுக ஆகிய கட்சிகளின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்கவும் சீரழிந்து போன தமிழகத்தை செப்பனிடவும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட, ஊழல் அற்ற நேர்மையான தூய்மையான உண்மையான மாற்று அரசியலை முன்னெடுத்துச்செல்லும் வகையில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மலர்ந்திட தமிழக வாக்காளர்கள் குறிப்பாக வருங்கால இளைய தலைமுறையினர் மக்கள் நலக்கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்து மக்கள் நல அரசு அமைந்திட ஆதரவு அளிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு வேண்டுகோள் விடுத்திருந்ததது. இதனையே வைகோ தனது பேச்சிலும் குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதி வீழ்வார்
கடந்த காலங்களில் நாம் நிராகரிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், இப்போது நாம் ஆலோசிக்கும் இடத்தில், பரிசீலிக்கும் இடத்தில் இருக்கிறோம். நமக்கு எதிராகப் பல தந்திரங்களை கலைஞர் செய்துள்ளார். அதை எல்லாம் நாம் முறியடித்து இருக்கிறோம். இப்போது நாம்தான் பிரதான சக்தி. கருணாநிதி அவசரப்பட்டு காங்கிரஸோடு கைகோத்துவிட்டார். அரசியலில் அவர் வீழ்வது உறுதி என்ற வைகோவின் பேச்சில் அனல் பறந்தது.

ஜெ. ஜெயிலுக்கு போவார்
ஜெயலலிதாவைப் பொறுத்தவரை அவ்வளவுதான். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஜெயிலுக்குப் போவது 99 சதவிகிதம் உறுதி என்பது என் கணிப்பு. ஊரை அடித்து உலையில்போடும் அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரு கட்சிகளையும் விரட்டி அடிப்போம்.

கருட வியூகம்
நம் அரசியல் எதிரிகள் நமக்கு எதிராக சர்ப வியூகம் அமைத்தால், கருட வியூகம் அமைத்து அதை நாம் வீழ்த்த வேண்டும் என்றும் வைகோ தொண்டர்களை உசுப்பேற்றியுள்ளார்.

வைகோ நம்பிக்கை
விஜயகாந்தும், வாசனும் நம் கூட்டணிக்கு வருவார்கள் என்று நம்பிக்கையுடன் பேசியுள்ளார் வைகோ, தேசிய முற்போக்கு திராவிடர் கழகமும் தமிழ் மாநிலக் காங்கிரஸும் நம்முடைய கூட்டணிக்கு நிச்சயம் வரும் என்று சொன்ன வைகோ, இப்படி புதிய கட்சிகள் வரும்போது கட்சியின் நலனுக்காகச் சில முடிவுகளை நான் எடுக்க வேண்டி வரும். அதைத் தொண்டர்கள் அனைவரும் ஏற்கவேண்டும் என்று கூறினாராம்.

தியாகம் செய்ய தயார்
நமது கட்சியையும், கூட்டணியையும் காப்பாற்ற எந்த தியாகத்தையும் செய்வேன் என்று பொதுக்குழுவில் உருகியுள்ளார் வைகோ. அதாவது, மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த்தை அறிவிக்கத் தயார் ஆகிவிட்டோம் என்று சொல்லாமல் சொன்னார் வைகோ.

எத்தனை தொகுதிகள்
மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிகவின் சிட்டிங் தொகுதிகள் உட்பட 120 தொகுதிகள் வரை விஜயகாந்திற்கு தர சம்மதம் கூறியுள்ள மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், இதர தொகுதிகளை மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமாகா, ஆகிய கட்சிகள் பங்கு பிரித்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்களாம். அதை வைத்துத்தான் வைகோ அப்படிப் பேசினாராம்.
எது எப்படியோ விஜயகாந்தை 'கிங்' ஆக ஏற்க மக்கள் நலக்கூட்டணி தயாராகி விட்டது. ஆபரை ஏற்றுக்கொள்வாரா கேப்டன்?.












Click it and Unblock the Notifications