நவ. 27-ல் 'தியாகத் திருநாள்- பினாங்கு பிரகடன விளக்க' கூட்டத்திற்கு அனுமதி வழங்குக: வைகோ
சென்னை: சென்னையில் நவம்பர் 27-ந் தேதி 'தியாகத் திருநாள் - பினாங்கு பிரகடனம்' விளக்க பொதுக்கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் நவம்பர் 27- ல் சென்னை, தி.நகர் முத்துரங்கன் சாலையில், ம.தி.மு.க சார்பில் தியாகத் திருநாள் - பினாங்கு பிரகடன விளக்க கூட்டத்திற்கு, போலீசிடம் விண்ணப்பித்திருந்தோம். மூன்று நாட்களுக்கு பிறகு தற்போது அனுமதி மறுத்துள்ளனர்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த கோரும் தீர்மானம்தான், "பினாங்கு பிரகடனம்" ஆகும்.
2002 இல் திருமங்கலத்தில் புலிகளை ஆதரித்து பேசியதற்காக நான் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டு 19 மாதம் சிறையில் அடைக்கப்பட்டோம். புலிகள் இயக்கத்தின் கொள்கையை ஆதரித்துப் பேசுவது சட்டப்படி குற்றம் ஆகாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
இதன் மூலம் ஜனநாயகக் கருத்து உரிமைக்கு காப்பு உரிமை பெற்றுத் தந்தேன். எனவே, "தியாகத் திருநாள் பினாங்கு பிரகடன விளக்கப் பொதுக்கூட்டம்" நடத்துவது என அறிவித்து உள்ளோம். அதற்கான அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்து இருக்கின்றோம்.
அனுமதி அளிப்பதாக தொடக்கத்தில் போலீசார் கூறியதால், பெரும் பொருட்செலவில் தேதி குறிப்பிட்டு சுவரொட்டிகள் அச்சிட்டு ஒட்டி இருக்கின்றோம். எனவே, நவம்பர் 27ஆம் தேதி பொதுக்கூட்டத்திற்கு, போலீஸ் அனுமதிய வழங்குமாறு தமிழக அரசு அறிவிக்க வேண்டுகிறேன்.
அரசியல் சட்டம் இந்தியக் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ள ஜீவாதார உரிமைகளுள் ஒன்றான பேச்சு உரிமைக்கு போலீசார் அனுமதி மறுப்பது, முந்தைய அரசைப் போல இந்த அரசிலும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.
அனுமதி மறுக்கப்பட்டால், சட்டப்படியும், அறப்போர் வழியிலும் ம.தி.மு.க நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
ஏற்கெனவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை நவம்பர் 26-ந் தேதி உலகத் தமிழர்கள் கொண்டாட வேண்டும் என்று வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இதனால் வைகோவை கைது செய்ய வேண்டும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியிருக்கிறார்.
இந்நிலையில் நவம்பர் 27-ந் தேதி தமிழீழத் தேசிய மாவீரர் நாள். அந்த நாளில் 'தியாகத் திருநாள்" என்ற பெயரில் மதிமுகவினர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications