ராஜா பேசுவதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது... வைகோ
நாகர்கோவில்: பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கையே கடுமையாக விமர்சித்தவன் நான். என்னை யாரும் அச்சுறுத்த முடியாது. நான் வீடு திரும்ப முடியாது என்று எச். ராஜா கூறியிருப்பதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நாகர்கோவில் வந்த அவர் அங்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், என்னைப்பற்றி எச்.ராஜா கூறியது நகைப்புக்குரியது. எச்.ராஜா கட்சியில் பெயர் வாங்குவதற்காக இப்படி பேசி உள்ளார்.
கூட்டணியில் இருந்து வெளியேறும்படி கூற சுப்பிரமணிய சாமிக்கு தகுதி இல்லை. எச்.ராஜா மற்றும் சுப்பிரமணிய சாமிக்கு எதிராக ம.தி.மு.க.வினர் செயல்படக்கூடாது.
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். ஆனால் நேரில் சந்திக்கும்போது என்னிடம் அன்பும், மரியாதையும் காட்டினார். நேற்று தானே உங்களை விமர்சனம் செய்தேன் என்று கூறும்போது உங்கள் கொள்கைக்காக நீங்கள் போராடுகிறீர்கள். அதற்காக தானே பேசினீர்கள் என்று கூறுவார்.
எம்.ஜி.ஆரை பற்றி கொள்கை ரீதியாக விமர்சனம் செய்தபோது அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தவில்லை. தி.மு.க.வில் இருந்து வெளியேறியபோது கருணாநிதியை கொள்கை ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்தபோதும் இப்படி யாரும் கூறவில்லை.
எனவே எச்.ராஜா மற்றும் சுப்பிரமணிய சாமிக்கு எதிராக போராட்டம் நடத்தவோ, உருவப்பொம்மை எரிக்கவோ கூடாது என்று ம.தி.மு.க.வினரிடம் ஏற்கனவே நான் கடுமையாக கூறி இருக்கிறேன். என்னை யாரும் அச்சுறுத்த முடியாது என்று கூறினார் வைகோ.