வைகோ தந்த தங்க மோதிரத்தை பத்திரமாக ‘பாக்கெட்டில்’ வைத்திருக்கும் திருமா!
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அணிவித்த தங்க மோதிரத்தை, கைகளில் அணியாவிட்டாலும் பத்திரமாக சட்டை பாக்கெட்டில் தான் வைத்துள்ளாராம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணியை அமைத்தன. தற்போது மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக, தமாகாவும் இணைந்துள்ளது.

இந்நிலையில், இந்தக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மோதிரச் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவனுக்கு 2 சவரன் மதிப்புள்ள தங்க மோதிரத்தை அணிவித்தார்.
தனது பெற்றோர், நண்பர்கள் கொடுத்தபோதுகூட அதை அணியாத திருமாவளவன், வைகோ தந்த மோதிரத்தை அணிந்தே அடுத்தடுத்து நடந்த பிரச்சாரக்கூட்டங்களில் பங்கேற்றார். இதனை பெருமையாக தனது பிரச்சாரத்தில் வைகோவும் குறிப்பிட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தண்டையார்பேட்டையில் நடைபெற்ற தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா வேட்பாளர் அறிமுக பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட திருமாவளவனின் கையில் மோதிரம் இல்லாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியானது.
ஆனால், இது உண்மையில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதிரம் போடும் பழக்கம் இல்லாத திருமாவளவனுக்கு, வைகோ அணிவித்த 2 பவுன் மோதிரத்தை விரலில் அணிந்திருப்பது பெரும் பாரமாக இருக்கிறதாம். இதனால், அடிக்கடி அதனை கழற்றி ஒவ்வொரு விரலாக மாற்றி வந்தாராம்.
ஒருகட்டத்தில் தனது இந்த செயல்கள் தனக்கே வித்தியாசமாகப் பட்டதால், மோதிரத்தைக் கழற்றி விட்டாராம். ஆனால், அதனை வேறு எங்காவது வைத்தால், அது காணாமல் போய்விடும் என்பதால், அதனை தனது சட்டைப் பாக்கெட்டில் வைத்தபடி பிரச்சாரங்களில் பங்கேற்கிறாராம் திருமாவளவன். மற்றபடி கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையே எந்தவித பிணக்கும் இல்லையாம்.












Click it and Unblock the Notifications