கலிங்கப்பட்டியில் பிரபாகரன் பிறந்த நாள்.. பொங்கல் வைத்து கொண்டாட்டம்.. வைகோ தாயார் பங்கேற்பு!
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியிலும் நேற்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதில் வைகோவின் தாயார் மாரியம்மாளும் கலந்து கொண்டார். ஊர் மக்கள் உற்சாகத்துடன் பொங்கல் வைத்து வான வேடிக்கை போட்டு அசத்தி விட்டனர் பிரபாகரனின் பிறந்த நாளை.
அரசியலில் பொன்விழா காணும் வைகோவின் பிறந்த ஊரான கலிங்கப்பட்டியில் வெகு விமரிசையாக ஊர் பொதுமக்கள் சார்பாக பிரபாகரனின் 60 ஆம் ஆண்டு மணிவிழா கொண்டாடப்பட்டது..
ஊர் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிசேக வழிபாட்டுடன் பொங்கல் வைத்து வண்ண வண்ண வாண வேடிக்கைகள் நிகழ்த்த இன்று இரவு 7-18 க்கு கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வைகோவின் தாயார் மாரியம்மாள், ஊராட்சி மன்ற தலைவர் வை.ரவிச்சந்திரன் மற்றும் திரளான ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.