மக்கள் நலக் கூட்டணியை வைகோ உருவாக்கியது இதற்குத்தான்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. வென்று ஸ்டாலின் முதல்வராவதைத் தடுக்கும் வகையில் மக்கள் நலக் கூட்டணியை முனைப்போடு உருவாக்கிய வைகோ அந்த கூட்டணியை விரிவுபடுத்தும் வகையில் தொடர் வியூகங்களை வகுத்து வருகிறார்.
தி.மு.க.வில் எதிர்காலத்தில் மு.க.ஸ்டாலினுக்கு போட்டியாக வைகோ இருப்பார் என்பதற்காகவே அவர் மீது கொலைப்பழி சுமத்தி கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். வைகோவின் அன்றைய இமேஜுக்கு ஸ்டாலின் சரியான போட்டியாக இல்லாத காலம்தான்..

இருந்தபோதும் வைகோ வெளியேற்றப்பட, மு.க. ஸ்டாலினுக்கு எதிராக உதயமானது ம.தி.மு.க. ஊர் ஊராக போய் மகனை முன்னிறுத்த என் மீது கொலைப்பழி சுமத்துகிறார்கள் என்று கர்ஜித்தவர் வைகோ... இருந்த போதும் தி.மு.கவுடன் பின்னர் சமரசமாகி கூட்டணியெல்லாம் வைத்துக் கொண்டார் வைகோ.
எந்த அ.தி.மு.கவை எதிர்த்து கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடையாய் நடந்தாரோ அதே அ.தி.மு.கவுடனும் கூட்டணி அமைத்தார் வைகோ..
கடந்த கால் நூற்றாண்டுகால ம.தி.மு.கவின் அரசியல் பாதையில் இப்போதுதான் அது பயணிக்க வேண்டிய திசையை நோக்கி சரியாக பயணிக்கிறது என கூறலாம்..
மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தியே வைகோ வெளியேற்றப்பட்டார்... தற்போது மு.க.ஸ்டாலின் தான் தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக கிட்டத்தட்ட முன்னிறுத்தப்படுகிறார்..
ஆகையால் அவரை வீழ்த்த வியூகம் வகுத்து 4 கட்சிகளுடன் மக்கள் நலக் கூட்டணியை வைகோ உருவாக்கினார். "ஸ்டாலினுக்காக பழிவாங்கப்பட்ட நாம் எப்படி ஸ்டாலின் அரியாசனத்தில அமர உதவ முடியும்? என்பதுதான் கட்சி தொண்டர்களிடம் வைகோ முன்வைக்கிற கேள்வியாகவும் இருக்கிறது.
மக்கள் நலக் கூட்டணியின் முதல் நோக்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதை விட தி.மு.க. ஆட்சியில் அமர்ந்துவிடக் கூடாது என்பதுதான்... அதுவும் மு.க.ஸ்டாலின் முதல்வராகிவிடக் கூடாது என்பதுதான். ஒருவேளை கருணாநிதி தான் அடுத்த முதல்வர் என்ற நிலை இருந்திருந்தால் மக்கள் கூட்டணியை வைகோ அமைத்திருக்க சாத்தியமில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். யாருக்காக (ஸ்டாலின்) தன்னை திமுக வெளியேற்றியதோ, அவரை முதல்வராக முன் நிறுத்தும் ஒரு தேர்தலில், அவரை வீழ்த்தும் அரசியலில் ஈடுபடுவதே மதிமுகவை ஆரம்பித்ததற்கே ஒரு அர்த்தமாக இருக்கும் என வைகோ நினைக்கிறார்.
இந்த கூட்டணியில் ஆகக் கூடுமானவரை தே.மு.தி.க, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் இணைத்து விடுவதற்கான அத்தனை பேச்சு வார்த்தைகளையும் வைகோ நம்பிக்கையோடு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் நலக் கூட்டணியில் இன்னும் 2 அல்லது 3 கட்சிகளை இணைத்து, அதாவது ம.தி.மு.க, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க, த.மா.க. என குறைந்தபட்சம் 15% வாக்குகளை உறுதி செய்ய முடியும் என வைகோ தரப்பு நினைக்கிறது.
அத்துடன் ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு இயல்பாக இருக்கும் எதிர்ப்பு வாக்குகளும் பலமான அணியான தங்களுக்கு கிடைக்கும் என்பதால் தி.மு.கவுக்கு சவாலாக வந்துவிடலாம் அல்லது தி.மு.கவை வீழ்த்தவும் முடியும்; ஸ்டாலின் முதல்வராவதை அல்லது எதிர்க்கட்சித் தலைவராவதைத் தடுக்க முடியும் என்பதுதான் வைகோவின் கால்குலேஷன்.
வைகோ கால்குலேஷன் ஓ.கே. தான். ஆனால், மக்கள் கால்குலேஷன்?












Click it and Unblock the Notifications