அச்சமில்லை... அச்சமில்லை... பாரதி பாட்டுப் பாடி அசத்திய வைகோ
திருமங்கலம்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேர்தல் பிரச்சாரத்தின் போது, பள்ளிக்குழமைகளிடம் பாட்டுப் பாடி மகிழ்ந்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் இரண்டாவது நாளாக பொதுமக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார்.
பிரச்சாரத்தின் போது, பெரிய உலகாணி என்ற ஊரில் மலைவேம்பு மரக்கன்றுகளை நட்டு வைத்து அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசினார்.
மற்ற ஊர்களில் இல்லாத ஒரு சிறப்பு என்னவென்றால், இந்த ஊரில் மலைவேம்புக் கன்றை நட்டு வைப்பதற்கான வாய்ப்பை எனக்குத் தந்தார்கள். இதை நான் மறக்க முடியாது.
பாண்டிய மன்னர்கள் வேம்பம் பூ மாலை அணிந்து யுத்தகளத்திற்குச் சென்றார்கள்.
நம் வேம்புக்கும், மலை வேம்புக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன். வேம்புச் செடியை ஆடு மாடுகள் கடித்துத் தின்றுவிடும். மலை வேம்பை கடிக்க முடியாது. இந்த மலைவேம்பை நன்றாக வளர்ப்போம் என்றார்கள்.
நான் திரும்வும் உங்கள் ஊருக்கு வருவேன். அப்போது இந்த மலைவேம்பு நன்றாக வளர்ந்திருக்க வேண்டும். வேப்ப மரத்தின் நிழல் நம் உடம்புக்கு நல்லது என்று சங்க இலக்கியத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த ஊர் மிகவும் வீரமான ஊர் என்பது எனக்குத் தெரியும். நான் ஈழத் தமிழர்களுக்காவும், முல்லைப் பெரியாறுக்காவும் பாடுபடுகிறேன். நான் சாதி, மத வித்தியாசத்துக்கு அப்பார்பட்டவன்.

ஊரின் பெருமை
வீர வரலாற்றுக்குரிய மக்கள் வாழுகிற ஊர் இந்த உலகாணி என்பதை நான்அறிவேன். உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்பதைப் போல, உலக மக்கள் அடங்கிய தேருக்கு கடையாணியாக இருக்கக்கூடிய விவசாயிகள் இருப்பதனால் இந்த ஊருக்கு உலகாணி என்ற பெயரை நம் முன்னோர்கள் சூட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெரிய உலகாணியில் என்னை வரவேற்ற உங்கள் அனைவருக்கும் நன்றி.

உங்களுக்காக உழைப்பேன்
உங்களுக்காக தொடர்ந்து நான் உழைக்க, உங்கள் குழந்தைகளின் நன்மைக்காகப் போராட, விவசாயிகள் கண்ணீரைத் துடைக்க பாடுபட பம்பரம் சின்னத்துக்கு வாக்களித்து உங்கள் எம்.பி.யாக என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இந்த ஊரில் இருக்கக்கூடிய அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் ஒற்றுமை
யார் எந்தெந்தக் கட்சியில் இருந்தாலும் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதுதான் வருங்கால தலைமுறைக்கும், தாய்மார்களுக்கும், ஊருக்கும் நல்லது.

உங்க வீட்டுப்பிள்ளை
உங்கள் இன்ப துன்பங்களில் பங்குகொள்கின்ற உங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கருதி, பம்பரம் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

பள்ளிக்குழந்தைகளிடம் வைகோ
அதைத் தொடர்ந்து டி.கொக்குளம் கிராமத்திற்குச் சென்ற வைகோ பள்ளிக் குழந்தைகளைக் கண்டதும் மகிழ்வோடு அவர்களிடம், நன்றாகப் படிக்கிறீர்களா? நீங்கள் நன்றாகப் படித்து பெரிய பெரிய அதிகாரிகளாக வரவேண்டும். அப்போதுதான் உங்கள் பெற்றோர் உங்களைப் பார்த்து சந்தோசப்படுவார்கள்.

நல்லா விளையாடுங்க…
"அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே!" என்று பாட்டுப் பாடி குழந்தைகளையும் பாடச் செய்து மகிழ்ந்தார்.
காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவுதரும் நல்லபாட்டு மாலை முழுவதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா என்று பாரதியின் பாடலைப் பாடி, இது மாலைவேளை என்பதால் நன்றாக விளையாடுங்க என்று கூறினார் வைகோ.












Click it and Unblock the Notifications