ஓட்டுக்கு பணம் கொடுப்பதை ஆரம்பித்து வைத்ததே திமுகதான்: வைகோ தாக்கு
விருதுநகர்: எம்.ஜி.ஆர் காலத்தில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை. திமுகதான் முதலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தது, என்று மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான, வைகோ தெரிவித்தார்.
சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் ரகுராமனை ஆதரித்து நகர் பகுதியில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாகச் சென்று நேற்று பிரச்சாரம் செய்த வைகோ பேசினார். அவர் கூறியதாவது:
பாதி பேர் நமக்கு ஓட்டுப்போட மாட்டார்கள், மற்ற கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள். பணம் போய் சேர்ந்துவிட்டது. எனவே, திமுக, அல்லது அதிமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள். இவ்விரு கட்சிகளையும் மீறி வெற்றி பெற்றால் அதுதான் ஜனநாயகப் புரட்சி.
இளைஞர்கள் 60 சதவீதம் பேரிடம் வரவேற்பு இல்லை. காரணம் அவர்கள் ஓட்டுக்கு பணம் வாங்கிவிட்டார்கள். பணத்துக்காக ஓட்டு போட்டுவிட்டு சாக்கடை சரியில்லை, சாலைவசதி இல்லை, பேருந்து வசதி இல்லை, பாலம் கட்டவில்லை என்று கூறினால் எதுவும் வராது.
எங்கள் கூட்டணிக்கு 35 சதவீதம் ஓட்டுகள் கிடைக்கும். 150 இடங்களில் வெற்றி பெறுவோம். நான் போட்டியிட்டபோது எனக்கே ஓட்டு போடவில்லை. இந்த தொகுதியில் ரகுராமனுக்கா ஓட்டு போடப்போகிறார்கள். நீதி, தர்மம் வேண்டும் என்றால் ஓட்டு போடுங்கள்.
எம்.ஜி.ஆர் காலத்தில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை. திமுகதான் முதலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தது. இங்கு ஜனநாயகம் வென்றால் 6 கட்சியும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.