குடிநீர் பஞ்சத்தில் தவிக்கும் போது 'அம்மா குடிநீர்' பற்றி ஆளுநர் பாராட்டுவதா?: வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு மக்கள் குடிநீருக்காகத் தவித்துக் கொண்டிருக்கும்போது உருப்படியான திட்டங்களை முன்வைக்காமல் அம்மா குடிநீர் விநியோகம் பற்றி ஆளுநர் தமது உரையில் பாராட்டி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரை அவரது முந்தைய இரண்டு உரைகளின் நகலைப் போன்றுதான் இருக்கின்றது. மாநிலம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஆளுநர் உரையில் தெரிவித்திருப்பது நல்ல நகைச்சுவை.

வேலைவாய்ப்புகள் உருவாக்கும் புதிய திட்டங்கள் எதுவும் கடந்த இரண்டரை ஆண்டுக்கால அ.தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்படவில்லை. முன்பு அறிவிக்கப்பட்ட இளைஞர்களுக்கான தொழில் திறன் பயிற்சித் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

Vaiko slams Governor’s address

சட்டம் ஒழுங்கு சரியில்லை

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிவும், பாலியல் வன்கொடுமைகளும், கொலை கொள்ளைகளும் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழும் நிலைதான் நிலவுகிறது. ஆனால், சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக ஆளுநர் உரை மூலம் ஜெயலலிதா அரசு தன்னைத் தானே பாராட்டிக் கொண்டுள்ளது.

விளைபொருட்களுக்கு விலையில்லை

2013-14 தமிழகத்தின் உணவுத் தானிய உற்பத்தி 100 இலட்சம் மெட்ரிக் டன்னாக உயரும் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது. ஆனால், விவசாயிகளின் விளைபொருள்களுக்குக் கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய முன்வரவில்லை.

விவசாயிகள் கோரிக்கை

பருவமழை பொய்த்து பல்வேறு இன்னல்களுக்கும் இயற்கை இடர்பாடுகளுக்கும் ஆளாகி விவசாயி உற்பத்தி செய்கின்ற நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,000/- ஆகவும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 3,500/- ஆகவும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகின்றது.

ஏழைகளுக்கு சுமை

விலைவாசி உயர்வினால் சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் தாங்க முடியாத சுமையினால் அவதிப்படுகின்றபோது, தமிழக அரசின் அம்மா உணவகம் திறந்துள்ளதன்மூலம் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று ஆளுநர் குறிப்பிட்டு இருப்பது ஒட்டுமொத்த மக்கள் நலனில் அ.தி.மு.க. அரசுக்கு உள்ள அக்கறையின்மையைக் காட்டுகிறது.

மின்வெட்டு பிரச்சினை

மின்வெட்டின் காரணமாக தமிழ்நாட்டில் சிறு குறு தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன. குறிப்பாக விசைத்தறித் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்க முடியவில்லை. மின்வெட்டு மற்றும் அரசு நிர்வாகத்தில் புரையோடியுள்ள ஊழல்களால் முதலீட்டாளர்கள் அண்டை மாநிலங்களை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றனர்.

மணல் கொள்ளை

மணல் தட்டுப்பாட்டின் காரணமாகக் கட்டுமானத் தொழில் முழுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மணல் கொள்ளையைத் தடுத்து மணல் விநியோகத்தை முறைப்படுத்தி மக்களுக்குச் சீராகக் கிடைக்க எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இல்லை.

மதுவிலக்கு கொள்கை

தமிழ்நாடு முழுவதும் மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி மக்கள் குறிப்பாக தாய்மார்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு குறித்து ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் இல்லை. மொத்தத்தில் இந்த ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+