ஜல்லிக்கட்டுக்கு தடை: தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது- வைகோ தாக்கு
மதுரை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்கின்றது என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
வைகோ கூறியதாவது: "தமிழ்நாட்டில் மதுவினால் பல இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். அண்ணல் காந்தி அடிகள், அம்பேத்கார் ஆகியோர் மதுவின் கொடுமைகளை வலியுறுத்தி உள்ளார்கள்.
இந்த மதுவினால் பல குடும்பங்கள் கெடுகிறது. சமுதாயம் சீரழிந்து வருகிறது. பெண்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். மதுவினால் அரசுக்கு 23 ஆயிரத்து 500 கோடி வருமானம் கிடைப்பதாக கூறுகிறார்கள். மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.
குறிப்பாக காவேரி நீர் பிரச்சினை, இலங்கை அதிபர் ராஜபக் சேயுடன் உறவு வைத்து இருப்பது ஆகியவையெல்லாவற்றையும் கூறலாம்.
ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தமிழகத்திற்கு மத்திய அரசு செய்துள்ள துரோகங்களில் ஒன்று" என்று தெரிவித்துள்ளார்.