விவசாயிகளின் தொடர் மரணம்.. குடும்பத்திற்கு 25 லட்சம்.. மதுரையில் வைகோ ஆர்ப்பாட்டம்
வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும் என்று வைகோ கோரியுள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வைகோ கோரினார்.
காவிரியில் இருந்து நீர் கிடைக்காததாலும், வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதாலும் தமிழகத்தில் வறட்சி தாண்டவமாடி வருகிறது. இந்த கடுமையான வறட்சி ஏற்படுத்திய பாதிப்பால் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நெல், சோளம், கரும்பு என அனைத்து பயிர்களும் கருகிய வேதனையில் இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி இன்று மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய வைகோ, நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் வழங்க வேண்டும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மேலும், விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடனை மத்திய அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications