கோவில்பட்டியில் விவசாயிகளுக்காக கையில் ஏர் கலப்பையுடன் களமிறங்கிய வைகோ
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிவாரணம் வழங்கக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போராட்டம் நடத்தினர்.
Recommended Video
கோவில்பட்டி: பல லட்சக்கணக்கான மானாவாரி விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளாக தங்களின் பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு நிவாரணம் கிடைக்கப்பெறாமல் துன்பத்தில் உழன்று வருகின்றனர் என்று வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கோவில்பட்டியில், மானாவாரி விவசாயப் பயிர்களுக்கு பயிர் காப்பீடு நிவாரணத் தொகை வழங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கையில் ஏர்கலப்பை ஏந்தி வைகோ ஆர்பாட்டம் நடத்தினார். ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்தியில் பேசிய வைகோ, தங்கள் விளைநிலங்களில் பயிர் செய்யும் விவசாயிகள் எதிர்பாராத வறட்சி, இயற்கைப் பேரிடர் காரணமாக உரிய விளைச்சலைப் பெற முடியாத வேளைகளில் பெருநட்டங்களில் இருந்து அவர்களை ஓரளவு காப்பாற்ற பயிர்க் காப்பீட்டு திட்டம் நடை முறையில் உள்ளது.
பயிர் காப்பீட்டு நிவாரண தொகை
பாதிக்கப்படும் விவசாயிகள் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற தத்தமது பயிர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு காப்பீட்டுக் கட்டணம் செலுத்தி விடுகின்றனர். அவ்வாறு பயிர்க் காப்பீட்டுக் கட்டணம் செலுத்திய விவசாயிகள், தங்கள் நிலங்களில் பயிரிட்ட பயிர்கள் வறட்சி, இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் உரிய விளைச்சலைப் பெற முடியாத சூழலில் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவிலான பயிர்க்காப்பீட்டு நிவாரணத் தொகையினை அரசு வழங்க வேண்டும்.
மானவரி பயிர்கள்
கடந்த 2015-16, 2016-17 இரண்டு ஆண்டுகள் தமிழகம் எங்கும் கடுமையான வறட்சி நிலவியது. சில இடங்களில் பருவம் தப்பிப் பெய்த மழையால் பயிர்கள் மூழ்கி வருவாய் இழப்பு ஏற்பட்டது. கடந்த இரு ஆண்டுகளில் பயிரிடப்பட்ட மானாவாரி பயிர்களான பருத்தி மற்றும் மக்காச்சோளம், பாசி உள்ளிட்ட பயிறு வகைப் பயிர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித பயிர்க்காப்பீட்டு நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை. இதனால் கிராமப்புற விவசாயிகள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பருவமழை ஏமாற்றம்
‘பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்' என்பதற்கு ஏற்ப நடப்பு ஆண்டிலும் பருவ மழையை எதிர்பார்த்து மானாவாரியில் பயிரிட்ட விவசாயிகளுக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லாததால் பேரிழப்பிற்கு ஆளாகித் தவிப்பதை கிராமப்புற விவசாயிகளைச் சந்திக்கும்போது அறிய முடிகிறது.
கடனில் தவிக்கும் விவசாயிகள்
இதன் விளைவாக விவசாயப் பெருமக்கள் மேலும் மேலும் கடனில் மூழ்கித் தவிக்கும் பரிதாப நிலைதான் உருவாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் மானாவாரி விவசாயிகள் எவ்வித பயிர்க்காப்பீடு உதவியும் கிடைக்கப் பெறாமல் பெரும் துன்பத்தில் தவித்து வருகின்றனர்.
அச்சுறுத்தும் டெங்கு
தமிழகத்தை கொள்ளை நோயாகப் பரவியுள்ள டெங்கு ஒருபுறம் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், பல லட்சக்கணக்கான மானாவாரி விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளாக தங்களின் பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு நிவாரணம் கிடைக்கப்பெறாமல் துன்பத்தில் உழன்று வருகின்றனர்.
நிவாரணம் வழங்குக
தமிழக அரசு மேலும் காலதாமதம் செய்யாமல் கொந்தளித்துக் கொண்டிருக்கும் மானாவாரி பயிர் செய்து, வருவாய் இழந்த விவசாயிகளின் வேதனையை உள்வாங்கி, அவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கின்ற 2015-16, 2016-17 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குரிய பயிர்க்காப்பீட்டு நிவாரணத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தினார்.