ரூபாய் நோட்டு: மக்களுக்கு துன்பம் எதுவும் இல்லை- 90% பேர் ஆதரவு மோடிக்கு இருக்கிறது- வைகோ
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்களுக்கு துன்பம் இல்லை என வைகோ கூறியுள்ளார்.
சென்னை: ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் மக்களுக்கு துன்பம் எதுவும் இல்லை; 90% பேர் பிரதமர் மோடியை ஆதரிக்கிறார்கள் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு விவகாரத்தில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கட்சி பிரதமர் மோடியை கடுமையாக எதிர்க்கின்றன. ஆனால் மதிமுக பொதுச்செயலர் வைகோ தொடர்ந்தும் ஆதரித்து வருகிறார்.
புதிய தலைமுறையின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற வைகோ கூறியதாவது:
ரூபாய் நோட்டு விவகாராத்தில் மக்களுக்கு துன்பம் எதுவும் இல்லை. கருப்பு பணம், ஊழலை ஒழிக்க பிரதமர் மோடி எடுத்திருக்கும் மிகச் சிறந்த நடவடிக்கை.
கொள்ளை அடித்தவர்களுக்குதான் இந்த அறிவிப்பால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ரொக்கமில்லா பரிவர்த்தனை மூலம் அனைத்து நடவடிக்கைகளும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக இருக்கும்.
இதனால் ஊழல் ஒழியும். கருப்புப் பணம் வங்கிகளுக்கு வரும். இந்த விவகாரத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். நாங்கள் இதை ஆதரிக்கிறோம்.
இடதுசாரிகளைப் பொறுத்தவரை ஈழம், நியூட்ரினோ பிரச்சனைகளில் எங்கள் நிலைப்பாட்டை அவர்கள் ஏற்கவில்லைதான்... வெவ்வேறு கொள்கைகள் இருப்பதால் தனி கட்சியாக இருக்கிறோம்.
இவ்வாறு வைகோ கூறினார்.