வீரபாண்டிய கட்டபொம்பன் 215ஆம் ஆண்டு நினைவு நாள்: வைகோ அஞ்சலி
நெல்லை: கட்டபொம்மனின் வீரமும், தியாகமும், அநீதி மற்றும் கொடுமையை எதிர்க்கும் மனமும் இளைஞர்களுக்கு வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 215-ம் நினைவு நாள் விழா அவரது நினைவிடம் அருகே நேற்று நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. வரதராஜன் தலைமை வகித்தார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசு வீமராஜா, பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக் குழு தலைவர் முருகபூபதி, திருச்செந்தூர் கட்டபொம்மன் டிரஸ்ட் தலைவர் ராமகிருஷ்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை துணைத் தலைவர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதிமுக பொதுசெயலாளர் வைகோ கட்டபொம்மன் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, பேசியதாவது:
இளைஞர்கள் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு பெற்றோர்களை மதித்து வாழ வேண்டும். விவசாய நிலங்களை விற்கக்கூடாது. மதுவிற்கு அடிமையாகாதீர்கள். கட்டபொம்மனின் வீரமும், தியாகமும், அநீதி மற்றும் கொடுமையை எதிர்க்கும் மனமும் இளைஞர்களுக்கு வேண்டும் என்றார் அவர்.
விழாவில், கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் கல்வி அறக்கட்டளை சார்பில் பரிசளிக்கப்பட்டது.
விழாவில், தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் ஜோயல், கயத்தாறு ஒன்றிய செயலாளர் கணபதிபாண்டியன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகாரமேஷ், கோவில்பட்டி நகர செயலாளர் ரமேஷ், ஆகியோர் பங்கேற்றனர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 16-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றைய தினம் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தில் பங்கேற்ற அவர், 18-ஆம் தேதி சங்கரன்கோவிலில் நடைபெறும்‘புதிய பார்வை' அமைப்பின் 20-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்கிறார்.
19-ஆம் தேதி மாணவர் அணியின் ‘வைகோவின் வெல்லும் சொல்' பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தகசபை அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்று பரிசளிக்கிறார் வைகோ.