சிறு குறுந் தொழில்களை நசுக்க முயற்சிப்பதா?... மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
சென்னை: இந்தியாவில் 8 கோடி மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் சிறு, குறுந் தொழில்களை நசுக்கும் வகையிலா கொள்கை முடிவை மத்திய பா.ஜ.க அரசு கைவிட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான ‘மேக் இன் இந்தியா' திட்டம், விவசாய நிலங்களைப் பறித்து, வேளாண்மைத் தொழிலை நலிவடையச் செய்வதைப்போன்று உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:.

நசியும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள்
போதிய நிதி ஆதாரம் இல்லாமை, மின்வெட்டு, அதிக வட்டி , கடன் கிடைக்காமை, உற்பத்திப் பொருட்களுக்கான தொகை குறித்த காலத்தில் கிடைக்காமை போன்ற காரணங்களால் சுமார் 4.68 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நட்டமடைந்து விட்டன.

பறிபோகும் வேலை வாய்ப்பு...வாழ்வாதாரம்!!!
தமிழகத்தில் மட்டும் 44 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் நலிந்துள்ளன. தற்போது பா.ஜ.க. அரசு மேற்கொண்ட கொள்கை முடிவால், சிறு, குறுந் தொழில்கள் முழுவதுமாக நலிவடைந்து, கோடிக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பட்டியலில் இருந்து சிறு தொழில்கள் நீக்கம்?
மத்திய அரசின் அறிவிப்பு ஆணைப்படி ஊறுகாய், ரொட்டி, மெழுகுவர்த்திகள், சலவை உப்பு, தீப்பெட்டி, பட்டாசு, ஊதுபத்தி, கண்ணாடி வளையல், மரச்சாமான்கள், மேசை, நற்காலி, அலமாறிகள், அலுமனியப் பொருட்கள் மற்றும் பயிற்சி நோட்டுப் புத்தகங்கள், பதிவேடுகள் உள்ளிட்ட 20 பொருட்களை சிறு தொழில்கள் பட்டியலில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கான கடமை, பொறுப்பு
வேளாண் தொழிலுக்கு அடுத்தபடியாக கோடிக்கணக்கான மக்கள் சிறு தொழில்கள் மூலம் வேலைவாய்ப்புப் பெற்று இருக்கிறார்கள். சிறு, குறுந் தொழில்கள் சந்திக்கும் நெருக்கடிகளைக் களைந்து, அவற்றை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் மத்திய-மாநில அரசுகளுக்கு இருக்கின்றன.

கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்!
சிறு, குறுந் தொழில்கள் நலிவடைந்தால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் என்பதை உணர்ந்து, சிறு தொழில்கள் பட்டியலில் இருந்து 20 பொருட்களை நீக்கும் அறிவிப்பாணையை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications