கச்சத்தீவில் புதிய தேவாலயம்: இலங்கை அரசின் முயற்சியை தடுக்க வைகோ வலியுறுத்தல்!
சென்னை: கச்சத்தீவில் இலங்கை அரசு புதிய கிறிஸ்தவ தேவாலயம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திரா காந்தி ஆட்சியின் போது மத்திய அரசு 1974 ஆம் ஆண்டு, கச்சத் தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்த்தது. அதன்படி போடப்பட்ட ஒப்பந்தத்தில், தமிழக மீனவர்கள் அங்கு மீன் பிடிக்கும் மரபு உரிமையும், மீன்பிடி வலைகளை உலர்த்தவும் அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டது.
ஆனால் கடந்த முப்பது ஆண்டு காலமாக இலங்கை அரசின் கடற்படை, தமிழக மீனவர்களை எல்லை கடந்து வந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இலங்கை அரசு கச்சத் தீவில் ஒரு கோடி ரூபாய் செலவில் புதிய கிறிஸ்தவ தேவாலயம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி இருக்கிறது. இலங்கை அரசு கச்சத் தீவில் கிறிஸ்தவ தேவாலயம் அமைப்பதின் நோக்கம், கச்சத் தீவை தங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக வைத்துக்கொள்வதுடன், தமிழக மீனவர்கள் அங்கு செல்வதை தடுப்பதும்தான் என்பது திட்டவட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது.
இதன்மூலம் கச்சத் தீவில் உள்ள அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு தமிழக மீனவர்கள் சென்று வருவதை தடை செய்ய இலங்கை அரசு முயற்சிக்கிறது. எனவே இலங்கை அரசு, கச்சத் தீவில் கிறிஸ்தவ தேவாலயம் அமைக்கும் திட்டத்தை இந்திய அரசு தடுத்து நிறுத்துவதுடன், இந்திய அரசு இலங்கையுடன் செய்துகொண்ட கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு வைகோ தமது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications