ராபர்ட் கால்டுவெல் எழுதிய நூலை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்: வைகோ
சென்னை: ராபர்ட் கார்டுவெல் அவர்களின் 200வது பிறந்தநாளினை சிறப்பளிக்கும் வகையில் அவர் எழுதிய‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எனும் நூலை தமிழக அரசு தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தென்னாட்டில் வழங்கும் மொழிகளின் சொல் நிலைகளையும், இலக்கணக் கூறுகளையும் ஒப்புநோக்கி நுணுக்கமாக ஆராய்ந்து, திராவிட மொழித்திறம் உணர்த்திய பெருமைக்குரியவர் கால்டு வெல்.
அயர்லாந்து நாட்டில் கிலாடி ஆற்றின் கரையில் அன்ட்ரிம் எனும் ஊரைச் சேர்ந்த மேய்ப்பர் முற்றம் எனும் இடத்தில் 1814 இல் மே 7 இல் பிறந்தவர் ராபர்ட் கால்டுவெல்
1881-ல், ‘திருநெல்வேலி சரித்திரம்' எனும் அற்புதமான நூலை ஆங்கிலத்தில் தந்தார் இம்மாமனிதர். ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எனும் அவரது நூல் பல பதிப்புகள் கண்டிருக்கின்றன.
கால்டுவெல் உயிரோடு இருந்தபொழுது, 1875-ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல், 2-வது விரிவான பதிப்பாக லண்டனில் வெளியிடப்பட்டது.
அதன் உண்மையான பதிப்பு 2008 இல் மீண்டும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. சமயப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்று, பின்னர் அவர் இடையங்குடியில் கிருத்துவச் சமய திருப்பணி செய்ததோடு, அங்கு ஒரு அழகான தேவாலயம் எழுவதற்கும் காரணமாக இருந்தார்.
1891 ஆகஸ்ட் 28இல் கால்டுவெல் கொடைக்கானலில் இயற்கை எய்திய உடன், அவரது பூத உடல் இடையன்குடிக்கு கொண்டுவரப்பட்டு, தேவாலய வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டது.
இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த கால்டுவெல் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல அரிய நூல்களைத் தந்துள்ளார்.
கால்டுவெல்லின் 200-வது பிறந்த நாளினை சிறப்பளிக்கும் வகையில் தமிழக அரசே அந்த பதிப்பை முழுமையாக தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும்.
செந்தமிழுக்கு அரிய சேவை செய்த அறிஞர் கால்டுவெல்லின் நீடுபுகழ் போற்றுவோம்! என்று வைகோ தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.