திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது: வைகோ, வேல்முருகன், ஜி.வி.பிரகாஷ் கண்டனம்
சென்னை: மே 17 இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் குண்டர் சட்டம் பாய்ந்ததற்கு வைகோ, வேல்முருகன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மெரினாவில் போராட்டம் நடத்த தடை இருக்கும் நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
2009 ஆம் ஆண்டில் இலங்கைத் தீவின் முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் சிங்கள இனவாத அரசால் ஈவு இரக்கம் இன்றிப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு, ஆண்டுதோறும் அமைதி வழியில் நினைவேந்தல் வீர வணக்க நிகழ்ச்சி மெரினா கடற்கரையில், மே 17 இயக்கம் நடத்தி வந்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக நான் அதில் பங்கேற்று இருக்கின்றேன். வழக்கம்போலவே, இந்த ஆண்டு மே 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மெரினா கடற்கரையில் அத்தகைய நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த முயன்றபோது, தமிழகக் காவல்துறை தடுத்தது. அமைதி வழியில் நடத்த முயன்ற தமிழ் ஈழ உணர்வாளர்கள் காவல்துறையால் தாக்கப்பட்டனர்.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட ஏழு பேரும், தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த 9 பேரும், காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், குதிரை கீழே தள்ளியது மட்டும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்பது போல மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதும், தமிழர் விடியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டைசன், மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன் மற்றும் தோழர் அருண்குமார் உள்ளிட்ட நால்வர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்குகள் பதிவு செய்து, அடக்குமுறையை ஏவி இருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும். இதில் தோழர் அருண்குமார் அவர்களுக்கு ஜூலை 3ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.
தடுப்புக் காவல் சட்டம், மிசா சட்டம், தடா சட்டம், பொடா சட்டம், தேசப் பாதுகாப்புச் சட்டம் போன்ற ஜனநாயகத்தை அழிக்கின்ற கொடிய சட்டங்களைப் பயன்படுத்தி அரசுக்கு எதிர்ப்புக் குரல் எழுப்புவோரைக் கைது செய்து சிறையில் அடைத்து அரசுகள் பாசிச வெறியாட்டம் நடத்தி வந்துள்ளன. இந்திய அரசியல் சட்டம் உறுதி அளித்துள்ள பேச்சு உரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை நசுக்க இன்றைய தமிழக அரசு காவல்துறையைப் பயன்படுத்துவது அக்கிரமமான விபரீத நடவடிக்கை ஆகும்.
ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட இலங்கைத் தீவில்கூட தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி இவ்வாண்டு நடைபெற்றது. ஆனால் தாய்த் தமிழத்தில் அத்தகைய நினைவேந்தல் நிகழ்ச்சிக்குக்கூட காவல்துறை அனுமதிக்காதது உலகத் தமிழர்களின் பார்வையில் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைமையைத் தமிழகத்திற்கு ஏற்படுத்திவிட்டது. தமிழ் உணர்வாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை, குறிப்பாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு இரத்து செய்து, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்:
ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரையில் மே 17 இயக்கம் சார்பில் இலங்கை இனப்படுகொலை நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு கடந்த 21ந் தேதி ஞாயிறன்று நடத்த இருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி அரசு தடை விதித்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை தடையின்றி நடந்து வந்த இந்த நிகழ்ச்சிக்கு, ஜெயலலிதாவின் ஆட்சியையே தொடர்வதாகச் சொல்லும் எடப்பாடி அரசு தடை விதிக்கக் காரணமென்ன? நடுவண் மோடி அரசின் தூண்டுதலால்தான் எடப்பாடி தடை விதித்தார் என்பது வெட்டவெளிச்சமானது.
இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்ச்சி நீர்நிலைகளின் கரையில்தான் உலகெங்கும் காலகாலமாக நடந்து வருகிறது. அதற்கு உலகில் எந்த நாட்டிலும் தடை இருப்பதில்லை. அந்த வகையில் வழக்கம்போல் அன்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் என் தலைமையில் அமைதிப் பேரணியாகச் சென்று நினைவேந்தலில் கலந்துகொண்டோம். அன்று இரவு சிவகங்கை மாவட்டம், காலையார்கோவிலிலும் இதே நினைவேந்தல் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ள வேண்டி இருந்ததால் நான் உடனடியாக கிளம்பிச் சென்றுவிட்டேன்.
அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை போலீஸ் கைது செய்தது. பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, காஞ்சி மக்கள் மன்றத்தை சேர்ந்த தஞ்சை தமிழன், தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் டைசன், தோழர்கள் இளமாறன், அருண் உள்ளிட்ட 17 பேர் மீது பொய் வழக்குப் போட்டு புழல் சிறையில் அடைத்தனர். எடப்பாடி அரசு இப்படி நடந்துகொள்வதா என்று மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் இன்று 29.05.2017ல் அவர்களது நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், தோழர்கள் திருமுருகன், டைசன், இளமாறன், அருண் ஆகிய நால்வர் மீதும் குண்டர் சட்டத்தைப் பாய்ச்சி மீண்டும் தளைப்படுத்தியுள்ளனர். எடப்பாடி அரசின் இந்தக் கொடுஞ்செயல் தமிழக மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
திருமுருகன் காந்தியோ அல்லது மற்ற மூவருமோ இதுவரை வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாக அவர்கல் மேல் எந்த வழக்கும் கிடையாது. அப்படியிருக்க அவர்கள் மேல் மீது குண்டர் சட்டத்தை ஏவியிருப்பது, எடப்பாடி அரசின் வஞ்சக நோக்கத்தையே காட்டுகிறது. இனப்படுகொலைக்குள்ளான தமிழீழ மக்களை நினைவுகூருவதை வன்முறைச் செயல் போல் சித்தரிக்க முயல்வது, மோடி அரசின் எடுபிடியாகத் தமிழக அரசு மாறிவிட்டதையே காட்டுகிறது. மோடி அரசின் ஆசையையே எடப்பாடி அரசு நிறைவேற்றியிருக்கிறதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டுகிறது.
உடனடியாக தோழர் திருமுருகன் உள்ளிட்ட நால்வர் மீதான குண்டர் சட்ட வழக்கை ரத்து செய்து, அவர்களை சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்; அமைதியான முறையில் போராடுவோர் மீது அடக்குமுறைகளை ஏவும் எதேச்சாதிகாரப் போக்கை எடப்பாடி அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் கண்டனம்
மே17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன்காந்தி, டைசன், அருண்குமார் உள்ளிட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று தமது டிவிட்டர் பக்கத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications