ஆந்திராவால் தமிழகத்தின் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாதிப்பு- புல்லூர் தடுப்பணையை பார்வையிட்ட வைகோ புகார்
வேலூர்: பாலாற்றின் குறுக்கே ஆந்திரா கட்டும் 22 தடுப்பணைகளால் தமிழகத்தின் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
வாணியம்பாடி அடுத்த புல்லூர் பாலாற்றுப் பகுதியில் தடுப்பணையை ஆந்திர அரசு உயர்த்திக் கட்டியது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களை நடத்தி வருகின்றன.
அதேபோல் புல்லூர் பாலாற்றில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கனகநாச்சியம்மன் கோவில் இருந்து வந்தது. இந்த கோவிலையும் ஆந்திரா பறித்துக் கொண்டது.

சீனிவாசன் தற்கொலை
இதனிடையே திம்மாம்பேட்டை பள்ளத்தூரைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் என்பவர் புல்லூர் தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்க எதிர்ப்புத் தெரிவித்து அணையில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தடுப்பணையில் சீனிவாசன் கால்தவறி விழுந்தார் என வேலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

புல்லூரில் வைகோ
இந்த நிலையில் துரைமுருகன் தலைமையிலான திமுக எம்.எல்.ஏ.க்கள் குழு அண்மையில் புல்லூர் தடுப்பணையை பார்வையிட்டனர். இதேபோல் மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று புல்லூர் தடுப்பணையைப் பார்வையிட்டார்.

விவசாயிகளுடன் சந்திப்பு
பின்னர் அங்கு விவசாயிகளிடம் ஆந்திரா அரசின் இந்த நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்புகளை வைகோ நேரில் கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மைசூர் மாகாண ஒப்பந்தத்தை மீறி ஆந்திரா அரசு தடுப்பணைகளை கட்டி வருகிறது.

4 லட்சம் ஏக்கர் நிலம் பாதிப்பு
பாலாற்றின் குறுக்கே மொத்தம் 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது ஆந்திரா. ஆந்திராவின் இந்த நடவடிக்கையால் தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தின் 4 லட்சம் ஏக்கர் விளைநிலம் பாதிப்படைந்துள்ளது. இவ்வாறு வைகோ கூறினார்.

சீனிவாசன் குடும்பத்துக்கு...
பின்னர் புல்லூர் தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சீனிவாசன் வீட்டுக்கு வைகோ சென்றார். அங்கு சீனிவாசன் படத்துக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல் கூறினார்.












Click it and Unblock the Notifications