எனக்கு ஏதாவது நேர்ந்தால்... உயிருக்கு ஆபத்து நேரிட்டால்.. வைகோ எச்சரிக்கை
சென்னை: எனக்கும், என்னைச் சேர்ந்தவர்களுக்கும் ஏதாவது நேர்ந்தால், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் முதல்வர் ஜெயலலிதாவே அதற்குப் பொறுப்பு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தை நேற்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த தமிழக சிவசேனா கட்சியினர் வந்துள்ளனர். இதையடுத்து உருட்டுக் கட்டைகளுடன் காத்திருந்த மதிமுகவினர் அவர்களை விரட்டியடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவசேனா கட்சியினர் காரில் வந்ததாகவும், அவர்களது கையில் துப்பாக்கி இருந்ததாகவும், முகத்தை காவித் துணியால் மூடியிருந்ததாகவும் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா கூறினார்.
இதையடுத்து தாயகம் வந்த வைகோ, கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவரது பேச்சு:
தாயகத்தை முற்றுகையிட சிவசேனா கட்சியினர் அனுமதி கேட்டுள்ளனர். அதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். முற்றுகையிட அனுமதி கொடுத்தவர்கள் தாயகத்திற்கு பாதுகாப்பு அளிக்காதது ஏன்? முற்றுகையிட வந்தவர்கள் தாயகத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்கில் வந்துள்ளனர்.
வந்தவர்கள் ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருந்ததாக கூறுகின்றனர். ஏற்கனவே கலிங்கப்பட்டியில் நடைபெற்ற மது விலக்கு போராட்டத்தில் என் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் இதனையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்க்கிறேன். எனக்கு காவல்துறை பாதுகாப்பு தேவையில்லை. தமிழக மக்கள் தான் எனக்கு பாதுகாப்பு. நான் எவ்வித பாதுகாப்பும் அரசிடம் இதுவரை கேட்கவும் இல்லை. இனிமேலும் கேட்க போவதில்லை.
எனக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் எவ்வித விபரீதம் நடந்தாலும் அதற்கு முதல்வர் தான் பொறுப்பு. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் அதற்கு முதல்வர் தான் பொறுப்பாகும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications