ம.ந.கூ. ஜெயிக்காவிட்டால் தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் மனப்பான்மை வரும்... மிரட்டும் வைகோ
விழுப்புரம்: சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வெற்றிபெறாவிட்டால் தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் மனப்பான்மை வந்துவிடும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ மிரட்டல் விடுத்துள்ளார்.
விழுப்புரத்தில் தேமுதிக கூட்டணி வேட்பாளர் எல்.வெங்கடேசனை ஆதரித்து வைகோ பேசியதாவது:
மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் இணைந்து புதிய இயக்கத்தை தொடங்கியபோது, இவர்கள் நீடிக்க மாட்டார்கள் என்றனர். திமுகவிடம் விஜயகாந்த் போய்விடுவார் என்றனர். விஜயகாந்துக்கு முதல்வராகும் தகுதி உள்ளதா என்றும் விவாதம் செய்தனர். தொகுதிக்கு ரூ.50 கோடி தருவதாக பேரம் பேசியவர்களையெல்லாம் பொருட்படுத்தாமல், வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல், எங்களிடம் வந்து சேர்ந்த உத்தமர் என்ற ஒரு தகுதி போதாதா அவருக்கு.

கருணாநிதி பேச்சு புரிகிறதா?
அடுத்ததாக விஜயகாந்த் நிதானமின்றி பேசுவதாக கூறுகின்றனர். கருணாநிதி பேசுவது புரிகிறதா? ஊடகங்கள் இதை ஏன் எழுதவில்லை?

போராடாத முக ஸ்டாலின்
நமக்கு நாமே பயணம் வந்தவர், மக்கள் பிரச்சினைகளுக்காக போராடினாரா? மதுவுக்கு எதிராகவும், ஆந்திராவில் தமிழர் படுகொலை, இலங்கை தமிழர் படுகொலை என்று எதற்காக போராட்டங்களை நடத்தினார்?

மீத்தேனுக்கு அனுமதி கொடுத்தவர்...
தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களை பாதிக்கும் மீத்தேன் அழிவுத் திட்டத்திற்கு கையெழுத்து போட்டவர் ஸ்டாலின். கெயில் எரிவாயு குழாய் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது ஏன்? இதற்கெல்லாம் அவர்களிடத்தில் பதில் இல்லை. உடனே அதிமுகவிற்கு ஆதரவாக பேசுவதாக திசை திருப்பினர்.

ஊழலை தடுப்போம்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம். எங்களை நெறிப்படுத்துவதற்கு ஒரு குழுவை அமைப்போம். அரசு கட்டிடங்கள், பாலங்கள் கட்டுவதை கண்காணிக்க பொது நல அமைப்புக் குழுவை அமைப்போம். இக்குழுக்களில் அரசியல் சாராதவர்கள் இருப்பார்கள். ஊழல் நடந்தாலோ, திட்டங்களில் குறைபாடு தெரிந்தாலோ கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இழப்பீட்டையும் பெறுவோம்.

மக்கள் தீர்ப்பை மாற்ற முடியாது..
நியுஸ் 7 டிவியும், தினமலரும் இணைந்து, திமுகவுக்கு ஆதரவான தேர்தல் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்கில்லை என்றும் ஆத்திரத்தில் வெளியிட்டுள்ளனர். திமுகவினரிடம் 5 டிவிக்கள் உள்ளன. மற்றவர்களிடமும் உள்ளது. மீதமுள்ள நடுநிலை தொலைக்காட்சிகளும் நடுநிலையை குழிதோண்டி புதைத்துவிட்டது. யாருக்கும் பொதுநல நோக்கமில்லை. மக்கள் தீர்ப்பை இவர்களால் மாற்ற முடியாது.

மாவோயிஸ்டுகள் மன்பான்மை வரும்
இப்போது மக்கள் நலக் கூட்டணி வெல்லாவிட்டால் எதிர்காலத்தில் 3-வது அணி வராது. கொள்ளைக்காக கூட்டணி அமைப்பதும், மாவோயிஸ்ட் மனப்பான்மையும் தான் தமிழகத்தில் ஏற்படும். இதை யோசித்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications