சி.பி.ஐ வழக்கில் வசமாய் மாட்டிய வைகுண்டராஜன் எந்த நேரத்திலும் கைது?
தூத்துக்குடி: சிபிஐ அதிகாரிகள் ரெய்டு வரலாம் என்ற பயத்தில் வைகுண்டராஜன் வீடு, அலுவலகங்களில் 3 நாட்களாக வக்கீல்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் வைகுண்டராஜன் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.
அதே சமயம் தூத்துக்குடி துறைமுக கழக முன்னாள் தலைவர் சுப்பையாவுக்கு ரூ.7.5 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் வைகுண்டராஜனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, சொத்துக்களை முடக்க சிபிஐக்கு தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் துறைமுக பொறுப்புக்குழு தலைவராக இருந்த சுப்பையா வருமானத்திற்கு அதிகமாக ரூ.8 கோடியே 23 லட்சத்து 93 ஆயிரத்து 501 மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்ததாக சிபிஐ கடந்த 2012ம் ஆண்டு இவர் மீது வழக்குப்பதிவு செய்தது.
இவர் சொத்து குவிப்பதற்கு தாது மணல் அதிபர் வைகுண்டராஜனும், அவரது சகோதரர் ஜெகதீசனும் உதவியதாக அவர்களை கைது செய்யும் முயற்சியில் சிபிஐ இறங்கியது. இருவருடைய முன்ஜாமீன் மனுக்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டதால் திடீரென தலைமறைவாயினர்.
இதையடுத்து சிபிஐ 5 தனிப்படைகளை அமைத்து அவரது வீடு, அலுவலகப் பகுதிகளிலும் மும்பை உள்ளிட்ட வெளியிடங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இதற்கிடையே கடந்த 3 நாட்களாக அவரது வீடு, அலுவலகங்களில் முன்னெச்சரிக்கையாக வக்கீல்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே தூத்துக்குடி துறைமுக கழக தலைவராக இருந்த சுப்பையாவுக்கு ரூ.7.5 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் விவி மினரல்ஸ் பங்குதாரர் வைகுண்டராஜன் மற்றும் அவரது சகோதரர் ஜெகதீசன் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் உயர் நீதிமன்ற மதுரை கிளை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் வைகுண்டராஜன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அதிரடியாக இருந்தன.
தாது மணல் கொள்ளை
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 20 ஆண்டுகளாக வைகுண்டராஜன் தாதுமணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார். அணுஉலை, அணுஆயுத தயாரிப்புக்குப் பயன்படும் தோரியத்தின் மூலப்பொருளான மோனோசைட் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 2 மில்லியன் டன் மோனோசைட் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோனோசைட்டில்தான் அணுகுண்டு தயாரிப்புக்கு பயன்படும் தோரியம் உள்ளது.
தேச துரோக குற்றவாளி
யுரேனியத்துக்கு மாற்று தோரியமாகும். தோரியத்தின் சந்தை மதிப்பு பல லட்சம் கோடி ரூபாயாகும். இதனால் அரசுகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் குற்றம் தேசத்துரோகமாகும். இருப்பினும் வைகுண்டராஜனை தமிழக அரசு பாதுகாத்து வருகிறது.
லஞ்சம் கொடுத்த வைகுண்டராஜன்
வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் தாது மணல் ஏற்றுமதி அனைத்தும் தூத்துக்குடி துறைமுகம் மூலமாகவே நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக தோரியம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கு உதவி செய்ததற்கு கைமாறாக துறைமுக கழக தலைவராக இருந்த சுப்பையாவுக்கு ரூ.7.50 கோடியை வைகுண்டராஜன் லஞ்சமாக வழங்கியுள்ளார். வைகுண்டராஜனுக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்துள்ளது.
தேடப்படும் குற்றவாளி
இந்த நிலையில், அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவரைத் தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக சிபிஐ அறிவிக்க வேண்டும். அவரைக் கைது செய்வதுடன், வைகுண்டராஜனின் சொத்துகளையும், அவரது நிறுவனங்களின் சொத்துகளையும் முடக்க வேண்டும்.
அனைத்தையும் தோண்ட வேண்டும்
கடந்த 20 ஆண்டுகளாக வைகுண்டராஜன் நிகழ்த்திய அனைத்து குற்றங்கள் குறித்தும், தூத்துக்குடி துறைமுகக் கழகத்தில் 20 ஆண்டுகளாக பணியிலிருந்த அதிகாரிகளின் சொத்துகள், அவர்களுக்கும் வைகுண்டராஜனுக்கும் உள்ள தொடர்பு, தாது மணல் அள்ளுவதற்கு தமிழக அரசு விதித்த தடை அமலில் இருக்கும் போதும், துறைமுக கழக அதிகாரிகளின் உதவியுடன் தாது மணல் ஏற்றுமதி நடைபெறுவது குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூத்திரதாரி சுப்பையா யார்?
'கடந்த 2007 முதல் 2012-ம் ஆண்டுவரை 5 ஆண்டுகளில் தூத்துக்குடி துறைமுகத்தில் துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவராக இருந்தவர் சுப்பையா. தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இவர் மேற்கு வங்க மாநில கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. மேற்கு வங்கத்தில் இருந்து டெபுடேஷனில்தான் இவர் தமிழகம் வந்தார். துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவராக இருந்த போது சுப்பையா மீது ஏராளமான புகார்கள் வந்ததைத் தொடர்ந்து சி.பி.ஐ இவரைக் கண்காணித்தது.
நில விவகாரத்தில் சிக்கினார்
'சுப்பையாவுக்கு மதுரை காரியாபட்டி கரிசல்குளம் கிராமத்தில், 20 ஏக்கர் நிலம் இருக்கிறது. அது அவரது தாயாரான ஜானகி பெயரில் உள்ளது. அந்த இடத்தை வைகுண்டராஜனுக்கு விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. 'வாங்கிய நிலத்துக்கான பணம் முதல் தவணையாக வைகுண்டராஜன் மூலம் ரூ.3.75 கோடியும் இரண்டாவது தவணையாக அவரது சகோதரர் ஜெகதீசன் மூலம் ரூ.3.75 கோடியும் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து, சுப்பையாவின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுதாம்.
7 பேர் மீது வழக்கு
தூத்துக்குடி வங்கியில் இருந்து காஞ்சிபுரம் வங்கிக் கிளைக்கு இது மாறி உள்ளதாம். 'கரிசல்குளம் கிராமத்தில் இருக்கும் 20 ஏக்கர் நிலம் ரூ.7.50 கோடி மதிப்புடையது அல்ல. லஞ்சமாகத் தர வேண்டிய பணத்தை இப்படித் தந்துள்ளார்கள்' என்று சந்தேகப்பட்ட சி.பி.ஐ. உடனடியாக வழக்கை பதிவு செய்தது. இதில் சுப்பையாவின் மனைவி ராதிகா, சுப்பையாவின் அண்ணன் ஜெயராமன், ஜெயராமனின் மனைவி கங்கா, சுப்பையாவின் தாயார் ஜானகி, வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் உட்பட 7 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல் மற்றும் ஊழல் செய்தல் என்ற பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்துள்ளது சி.பி.ஐ. தற்போது சுப்பையா மேற்கு வங்கத்தில் தகவல் தொலைத்தொடர்புதுறை முதன்மைச் செயலாளராக இருக்கிறார்.
சுப்பையாவின் அண்ணன்
இந்த வழக்கு 2012-ம் ஆண்டு போடப்பட்ட வழக்கிற்கு வைகுண்டராஜன் அன் கோ இப்போது முன்ஜாமீன் கேட்டதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இதுநாள் வரை அமைதியாக இருந்த சி.பி.ஐ கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மதுரை கே.கே.நகரில் உள்ள சுப்பையாவின் அண்ணன் ஜெயராமனை விசாரணைக்கு அழைத்துச் சென்றுவிட்டது. அவர் கைது செய்யப்பட்டுள்ளாரா இல்லையா என்பதை சிபிஐ தெரிவிக்கவில்லை.
சி.பி.ஐ அள்ள ரெடி
எந்த நேரத்திலும் மற்றவர்களும் கைதாகலாம் என்ற செய்தி வரவே முன்ஜாமீன் கேட்டு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வைகுண்டராஜனும் அவரது சகோதரர் ஜெகதீசனும் மனு செய்தனர். சி.பி.ஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாமிநாதன், 'அந்த இடம் அவ்வளவு மதிப்பு இருக்காது என்பதே உண்மை. இது வெளி உலகத்துக்கு வேண்டுமானால், நிலம் சம்பந்தம்பட்ட பண பரிவர்த்தனையாக இருக்கலாம். ஆனால், இது லஞ்சப்பணம்' என்று சொன்னார். இதனை நீதிபதி சொக்கலிங்கம் ஏற்றுக்கொண்டதோடு முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டார். இதனால் எப்போது வேண்டுமானாலும் அவர் கைதாகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குவிந்த வக்கீல்கள்
இதனையடுத்து வைகுண்டராஜனும் அவரது சகோதரர் ஜெகதீசனும் எந்த நேரமும் கைதாகலாம் என்று தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாக நாட்களாக அவரது வீடு, அலுவலகங்களில் முன்னெச்சரிக்கையாக வக்கீல்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், கீரைக்காரன்தட்டிலுள்ள அவரது வீடு, அலுவலகம், தூத்துக்குடி, நெல்லை அலுவலகங்களிலும் வக்கீல்கள் குவிந்துள்ளனர்.
கோவில்களில் சிறப்பு பூஜை
இதே வேளையில் வழக்கிலிருந்து வைகுண்டராஜனும் ஜெகதீசனும் தப்புவ தற்காக அவரது குடும்பத்தினர் பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜை, வழிபாடு செய்தனர். ஞாயிறன்று திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் வெயிலுகந்தம்மன் கோவிலில் விளக்கேற்றி வழிபாடு செய்தனராம்.
நில அபகரிப்பு புகார்
இந்த சிக்கல்களுக்கு இடையே நெல்லையில் ரூ.50 கோடி மதிப்புடைய நிலத்தை மோசடியாக அபகரித்ததாக விவி மினரல் அதிபர் வைகுண்டராஜன் மீது கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.50 கோடி நிலம்
நெல்லை, மேலப்பாளையம் ஞானியாரப்பா நகரைச் சேர்ந்தவர் பூலி முகம்மது மைதீன் (65). இவர் நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரனிடம் அளித்த மனு: மேலப்பாளையம் பைபாஸ் சாலையில் எனது குடும்பத்தினருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.50 கோடி ஆகும்.திசையன்விளையைச் சேர்ந்த வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் மற்றும் கோவில்பட்டியைச் சேர்ந்த ஆபிரகாம், கார்த்திகேயன், மேலப்பாளையம் அப்துல்ரகுமான் ஆகியோர் சேர்ந்து எங்கள் தோட்டத்தை, எங்களுக்கு தெரியாமல் பொது அதிகாரம் பெற்று சென்னையை சேர்ந்த பாண்டியன், கணேஷ் என்பவர் பெயரில் கிரையம் ஏற்படுத்தி மீண்டும் ஜெகதீசன் பெயரிலும் கிரையப்பத்திரம் ஏற்படுத்தி எங்களை ஏமாற்றி விட்டார்கள்.
கொலை மிரட்டல்
இந்நிலையில், எனக்கு மதுரை வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்தது. அதன்பிறகுதான் நில மோசடி நடந்தது தெரியும். உடனே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்து, நடவடிக்கை எடுக்க உத்தரவு பெற்றோம். நெல்லை மாநகர குற்றப்பிரிவில் என்னிடம் மட்டும் விசாரணை நடத்தப்பட்டது. நான் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்தேன். எதிர்மனுதாரர் யாரையும் விசாரிக்கவில்லை. மேலும் எதிர் மனுதாரார்கள் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர். எனவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
வசமாக மாட்டிய வைகுண்டராஜன்
வைகுண்டராஜனை சிபிஐ தேடி வரும் நிலையில், அவர் மீது நெல்லை கலெக்டரிடம் நிலமோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.