ஆண்டாள் பற்றி வைரமுத்து அவதூறாக பேசவில்லை... எதையும் சொந்தமாக கூறவில்லை - வக்கீல்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து அவதூறாக எதையும் கூறவில்லை என்றும் ஆராய்ச்சியாளரின் கருத்தை மேற்கோள் மட்டுமே காட்டி பேசினார் என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
சென்னை: ஆண்டாள் பற்றி அவதூறாக கவிஞர் வைரமுத்து சொந்தமாக எந்த கருத்தையும் கூறவில்லை என்றும், ஆராய்ச்சியாளரின் கருத்தை மேற்கோள் மட்டுமே கூறினார் என்றும் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக வைரமுத்துவை கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின.

வைரமுத்துவுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வந்தனர். பல இடங்களில் வைரமுத்து மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தான் பேசியது யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக வைரமுத்து தெரிவித்தும், வைரமுத்துவுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்தன.
ஆண்டாள் பற்றிய கருத்துக்காக வைரமுத்து மீது பல்வேறு ஊர்களில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. இதையடுத்தது தன்மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரமுத்து மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமெரிக்கா ஆராய்ச்சியாளர் கட்டுரையைதான் வைரமுத்து சுட்டிக்காட்டியதாக அவரது தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இதனைக் கேட்ட நீதிமன்றம் வைரமுத்து கூறிய கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்றும் தெரிவித்தது.
ஆராய்ச்சி கட்டுரையில் இருந்த கருத்தைத்தான் வைரமுத்து மேற்கோள் காட்டியுள்ளார். எனவே அது அவரது சொந்த கருத்தாக ஏற்றுக் கொள்ளமுடியாது என்று நீதிபதி தெரிவித்தார். வைரமுத்து கூறியதை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் கேள்வி எழுப்பினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரமேஷ் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்துவின் வழக்கறிஞர், வைரமுத்து சொந்தமாக தனது கருத்தை கூறி ஆண்டாளை அவமதிக்கவில்லை. ஆராய்ச்சியாளரின் கருத்தையே அவர் பேசினார் என்று வாதிட்டோம். இதில் அவதூறாக எதையும் கூறவில்லை என்று நாங்கள் வாதிட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications