மதுக்கடைகளை மூடுங்கள்... இந்த தலைமுறையைக் காப்பாற்றுங்கள்- வைரமுத்து
மதுக்கடைகள்தான் இன்றைய பெரும் சாபம். இவற்றை மூடி இந்தத் தலைமுறையைக் காப்பாற்ற வேண்டும் என்றார் கவிஞர் வைரமுத்து.
கவிஞர் வைரமுத்துவுக்கு இன்று பிறந்தநாள். இந்த நாளை ஆண்டுதோறும் கவிஞர்கள் தினமாக அவர் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு வெற்றி தமிழர் பேரவை சார்பில் ‘கவிஞர்கள் திருநாள்' விழா சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள பொன்மணி மாளிகையில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு, குஜராத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பு.ரா.கோகுல கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
2015-ம் ஆண்டுக்கான ‘கவிஞர்கள் திருநாள்' விருது கவிஞர் சல்மாவுக்கு வழங்கப்பட்டது. விருதினை, வெற்றி தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் கவிஞர் வைரமுத்து வழங்கினார்.

நான் வேலைக்காரன்
பின்னர் அவர் பேசுகையில், "பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவது வைரமுத்துவின் பெருமைக்காக அல்ல. ஏனென்றால் எனக்கு என்று எந்த ஒரு பெருமையும் இருப்பதாக நான் ஒரு போதும் கருதாதவன். நான் ஒரு வேலைக்காரன். தமிழுக்கும், தமிழர்களுக்கும் தன்னை மறந்து வேலை செய்கிற ஒரு வேலைக்காரன். இந்த வேலைக்காரனுக்கு என்ன பெருமை இருக்க போகிறது!

பெரும் பின்னடைவு
இன்றைக்கு தமிழ்நாட்டில் மிக பெரிய பின்னடைவு எது? என்று யோசித்து பார்த்தேன். கணிப்பொறி கூட பின்னடைவு அல்ல. கணிப்பொறியில் கவிதையை தட்டி விட்டால் கவிதை வருகிறது. செல்போனிலும் கவிதை வருகிறது. ‘வாட்ஸ்-அப்'பிலும் கவிதை வருகிறது. மொழி எங்கும் இருக்கிறது. மொழி எந்த இடத்தில் இல்லை என்றால் மதுசாலைகளில் தான்.

அடுத்த தலைமுறையில் குடிக்காதவன் இருப்பானா?
மது குடிக்கிறவர்கள் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக மனித வாழ்க்கை துண்டாடப்படுகிறது. விளிம்புநிலை பின்னுக்கு தள்ளப்படுகின்றன. ஒரு செய்தி 4 வயது சிறுவன் ஒருவன் மது குடிக்குமாறு பாதகர்கள் கட்டாயப்படுத்தி ஊற்றி இருக்கிறார்கள் என்று. கோவையில் ஒரு பள்ளி மாணவி குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டார் சீருடையோடு என்கிறபோது பாதிப்பு. இதை பார்த்தால் அடுத்த தலைமுறையில் குடிக்காதவன் எத்தனை பேர் இருப்பான்? என்று யோசிக்க வைக்கிறது.

மனித வளத்துக்கு ஆபத்து
ஒரு ஊரில் குடிகாரன் யார்? என்று கேட்டால், கோடி வீடு என்றார்கள் ஒரு காலத்தில், இன்றைக்கு குடிக்காதவன் வீடு எது? என்றால் தேடி பார்த்து சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மது மனித வளத்தை குறைக்கிறது. நாகரீகத்தை குறைக்கிறது. இலக்கியவாதிகளை குறைக்கிறது. கல்வியை குறைக்கிறது.

போரும் பாரும்
இலங்கையில் போரில் அதிகமான விதவைகள் உண்டானார்கள்.. தமிழகத்தில் பாரில் அதிகமான விதவைகள் உண்டாகிக் கொண்டிருக்கிறார்கள்.

மதுச் சாலைகளை மூடுங்கள்
அரசுக்கு ஒரு கோரிக்கை, இந்த நாடு மேம்பட வேண்டும் என்றால், நம்முடைய மனித வளம் முழுமை பெற வேண்டும் என்றால் மதுசாலைகளை மூட வேண்டும் என்பதை என்னுடைய பிறந்தநாள் செய்தியாக தெரிவித்துக்கொள்கிறேன். தலையை பாதுகாக்க தலைகவசத்தை போடுங்கள், ஒரு தலைமுறையை பாதுகாப்பதற்கு மதுச்சாலைகளை மூடுவது அவசியம்," என்றார்.

பங்கேற்றவர்கள்
நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், இயக்குநர்கள் எஸ்பி முத்துராமன், சரண், எழுத்தாளர் சிவசங்கரி, நடிகர் ராஜேஷ் மற்றும் திமுக பிரமுகர்கள் பலரும் பங்கேற்று வைரமுத்துவை வாழ்த்தினர்.












Click it and Unblock the Notifications