சினிமாவில் செல்லாக்காசாகி அரசியலுக்கு வந்த ஜெயலலிதா... வைரலாகும் வளர்மதியின் பழைய பேச்சு!
ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இன்றைய தலைமுறைக்கு அடையாளம் காட்டி கொண்டவர் வளர்மதி. ஆனால் ஜெயலலிதாவை செல்லாக்காசு என வளர்மதி விமர்சித்த பழைய பேச்சு இப்போது வைரலாக சோசியல் மீடியாவில் பரவுகிறது.
சென்னை: சினிமாவில் செல்லாக்காசாகி அரசியலுக்கு வந்தவர் ஜெயலலிதா என அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசிய பழைய பேச்சு இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
தம்மை ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக காட்டிக் கொண்டவர் வளர்மதி. ஜெயலலிதா சிறைக்குப் போன போது குய்யோ முறையோ என கூப்பாடு போட்டு அழுது அமைச்சர் பதவி ஏற்றவர்.
தீச்சட்டியும் சந்தோசமும்
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது தீச்சட்டி, மண்சோறு என ஏகத்துக்கும் பில்டப் கொடுத்தவர் வளர்மதி. ஆனால் ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த போது வளர்மதி சிரித்து பேசிக் கொண்டிருந்தது சலசலப்பை கிளப்பியது.
சசி அப்ரூவராகியிருந்தால்..
அதன் பின்னர், சசிகலா அப்ரூவராகியிருந்தால் ஜெயலலிதா சிறைக்கு போயிருப்பார் என பேசிய பேச்சு அதிமுக தொண்டர்களை கொந்தளிக்க வைத்தது. சசிகலாவுக்கு ஜால்ரா அடித்ததால் தற்போது பாடநூல் கழகத் தலைவராக்கப்பட்டிருக்கிறார் வளர்மதி.
செல்லாக்காசு ஜெயலலிதா
இந்த நிலையில் தற்போது வளர்மதியின் பழைய பேச்சு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எம்ஜிஆர் மறைவைத் தொடர்ந்து ஜானகி அணியில் வளர்மதி இருந்தார். அப்போது, சினிமாவில் செல்லாக்காசாகி அரசியலுக்கு வந்தவர் ஜெயலலிதா; என்னோடு ஒரே மேடையில் அரசியலை பற்றி விவாதிக்க ஜெயலலிதா தயாரா? என ஏகத்துக்கும் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
வறுபடும் வளர்மதி
அந்த அறிக்கையை தேடிப் பிடித்த நெட்டிசன்கள் இப்போது சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். வழக்கம்போல வளர்மதியின் இந்த பேச்சையும் வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.