காதலர் தினம்: நாய்களுக்குத் திருமணம், கிரீட்டிங்ஸ் கிழிப்பு... 30 இந்து முன்னணியினர் கைது
சென்னை: காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில் காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்து போராட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், திருப்பூரில் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களது அன்புப் பரிசுகளை பரிமாறிக் கொண்டும், பிடித்த இடங்களுக்கு ஜோடியாகச் சென்றும் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், காதலர் தினக் கொண்டாட்டங்கள் கலாச்சார சீரழிவுக்கு வழியமைப்பதாக இந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இத்தகைய கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவை வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், கோவை மாவட்ட இந்து முன்னணி சார்பில் காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழிக்கும் போராட்டம் காந்திபுரம் கிராஸ்கட் சாலை சந்திப்பில் நடைபெற்றது. போராட்டத்துக்கு செய்தி தொடர்பாளர் சசிக்குமார் தலைமை தாங்கினார்.
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டவாறே, அவர்கள் காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்துப் போட்டனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கும் போலீசார் தடை விதித்திருந்தனர். ஆனால், தடையை மீறி மாநகர் மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலாளர் சேவூகன் தலைமையில் தொண்டர்கள் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இதற்காக 2 நாய்களை கொண்டு வந்த அவர்கள் தாம்பூல தட்டில் பழங்கள் வைத்து சடங்குகள் செய்து தாலிகட்டி, மோதிரம் அணிவித்தனர்.
இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளில் காதலர் தினத்தை, ‘கழிசடைகள் தினம்' என குறிப்பிட்டு இந்து முன்னணியினர் நோட்டீசும் ஒட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.