கன்னியாகுமரி டூ பிலிப்பைன்ஸ் "லவ் லவ்".. காதலர் தினத்தில் "டும் டும்"!
கன்னியாகுமரி: ஜாதி, மொழி, மதம், ஏன் தேசங்களையை கடந்தது காதல். உண்மைக் காதல் எத்தனை போராட்டங்களை சந்தித்தாலும் வெல்லும். இதை உண்மை என்று நிரூபிக்கும் விதமாக , காதலர் தினத்தில் குமரி மாவட்ட இளைஞருக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்னுக்கும் நடந்த காதல் திருமணம் மாவட்டத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் ஆன்ட்ரூஸ் டேவிட் ,31. கடந்த 7 ஆண்டுகளாக துபாயில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவருடன் பணியாற்றி வரும் பிலிப்பைன்ஸ் நாட்டின் புலகான் பகுதியை சேர்ந்த ஷெரிலின் எஸ்.சாண்டியகோ என்பவருக்கும் இடையே நான்கு ஆண்டுகளுக்கு முன் காதல் மலர்ந்தது.

இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்ட பின் தங்கள் காதல் குறித்து இரு தரப்பு பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். பெற்றோர் தங்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
டேவிட் ஆன்ட்ரூஸ் தனது சொந்த ஊரில் தன் காதலியை திருமணம் செய்து கொள்ள ஷெரிலினின் பெற்றோரிடம் அனுமதி கேட்டார். அதற்கு அவர்கள் அனுமதி அளித்தனர். பிலிப்பைன்சிலிருந்து ஒரு நபருக்கு போக்குவரத்து செலவு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் ஆகும் என்பதால் ஷெரிலினை மட்டும் அவரது பெற்றோர் இந்தியாவுக்கு வழியனுப்பி வைத்து வாழ்த்தினர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் வந்தார் ஷெரிலின், அங்கிருந்து அவரை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்த டேவிட் ஆன்ட்ரூஸ், காதலர் தினமான நேற்று , தன் பெற்றோர் தலைமையில் உற்றார், உறவினர் முன்னிலையில் வெட்டூர்ணிமடம் பூத் டக்கர் ஆலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
காதலர் தினத்தையொட்டி காதல் திருமணத்தை அரங்கேற்றிய இத்தம்பதியரை அனைவரும் காதலர் தின வாழ்த்தோடு பாராட்டுக்களைத் தெரிவித்தனர். கன்னியாகுமரியில் பிறந்த டேவிட்டை பிலிப்பைன்ஸ் நாட்டின் குமரி ஷெரிலின் , காதலர் தினத்தில் கரம் பிடித்து தங்களின் காதல் உண்மையானது என்று நிரூபித்துள்ளார்.












Click it and Unblock the Notifications