ஸ்டாப்பிங்கை விடுங்க! நெல்லை-சென்னை வந்தே பாரத்தில் பெர்த் வசதி இருக்கா? தெற்கு ரயில்வே பதில் என்ன?
நெல்லை: நெல்லை- சென்னை இடையே வரும் 24 ஆம் தேதி இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி இருக்குமா என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை- மைசூர், சென்னை- கோவை, திருவனந்தபுரம்- காசர்கோடு ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் இயங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து நெல்லை- சென்னை மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் இயக்கப்படும் 3ஆவது ரயிலாகும்.

இந்த ரயிலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் அது எப்போது இயக்கப்படும் என்பது குறித்த தகவலை தெற்கு ரயில்வே வெளியிடாததால் அது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வந்தே பாரத் ரயிலில் பாதுகாப்பு வசதி இருப்பதால் இந்த ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க விரும்புகிறார்கள்.
மேலும் பயண நேரமும் குறைவு என்பதும் இந்த ரயிலுக்கு பிளஸ்ஸாக அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த ரயிலானது வரும் 24 ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இதனால் தென் தமிழக பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். நெல்லையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில், பிற்பகல் 2 மணிக்கு சென்னை வந்தடையும். மீண்டும் சென்னையிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 11 மணிக்கு நெல்லையை சென்றடையும் என தெரிகிறது.
நெல்லையிலிருந்து கிளம்பும் வந்தே பாரத் ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் 1400 முதல் 1500 வரை வசூலிக்கலாம் என தெரிகிறது. அது போல் எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் ரூ 3000 வரை டிக்கெட் விற்பனை இருக்கும் என்றும் தெரிகிறது. மேலும் உணவு வேண்டுமானால் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த ரயில் முதற்கட்டமாக 8 பெட்டிகளுடன் தொடங்கப்படுகிறது. இதன் பிறகு பெட்டிகள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. டெல்லி வரை செல்லும் வந்தே பாரத் ரயிலில் பெர்த் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது. இதனால் பயண நேரம் குறைந்து மக்கள் நிம்மதியாகவும் விரைவாகவும் பயணிக்கலாம்.
இதுவரை எந்த வந்தே பாரத் ரயிலிலும் படுக்கை வசதி கிடைக்குமா என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் 550 கி.மீ தூரத்திற்கு மேல் பயணிக்கும் வந்தே பாரத் ரயில்களுக்கு மட்டும் பெர்த் வசதி மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தனர். அப்படி பார்த்தால் சென்னை- நெல்லைக்கு தோராயமாக 648 கி.மீ.தூரம் உள்ளது. சென்னை டூ கோவை 495 கி.மீ. தூரமும் கொண்டது. அது போல் சென்னை டூ மைசூரும் 496 கி.மீ தூரம் உள்ளது. சென்னை - விஜயவாடா இடையே 383 கி.மீ. மட்டுமே உள்ளது. எனவே சென்னை டூ நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் 550 கீ.மீ தூரத்திற்கு மேல் இருப்பதால் இந்த ரயிலுக்கு பெர்த் வசதி கிடைக்கும் என தெரிகிறது. வரும் 24 ஆம் தேதி இல்லாவிட்டாலும் போக போக படுக்கை வசதிகள் அறிமுகப்படுத்த வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications