பூம்புகாரில் பாமக மகளிர் மாநாடு.. மகன் இடத்தில் மகளை மேடையேற்றும் ராமதாஸ்.. அன்புமணி பங்கேற்பு?
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ராமதாஸ் தலைமையில் வன்னிய மகளிர் மாநாடு இன்று நடக்கவுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக அன்புமணி இல்லாமல் பாமகவின் எந்த நிகழ்ச்சியும் நடந்ததில்லை. இதனால் வன்னிய மகளிர் மாநாட்டில் அன்புமணி பங்கேற்பாரா என்ற கேள்வி பாமகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த டிசம்பர் மாதம் முதலே இருவருக்கும் இடையில் மோதல் இருந்து வந்த நிலையில், ஏப்ரல் மாதத்தின் போது உச்சத்திற்கு சென்றது. இதனிடையே நேற்று அன்புமணி தலைமையில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அன்புமணி தலைமையிலான பாமகவின் பொதுக்குழு எந்த சிக்கலும் இல்லாமல் நடந்தது. பாமக கட்சி தொடங்கியதில் இருந்து ராமதாஸ் இல்லாமல் நடந்த முதல் பொதுக்குழு இதுதான். பொதுக்குழுவிலேயே ராமதாஸ்க்கு தனி இருக்கை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் பாமக சார்பாக வன்னிய மகளிர் மாநாடு நடக்கவுள்ளது. அன்புமணியை புறக்கணித்துவிட்டு மகளிர் மாநாட்டினை நடத்தி முடித்துவிட வேண்டும் என்பதில் ராமதாஸ் தீவிரமாக இருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் அன்புமணி இல்லாமல் பாமகவின் எந்த நிகழ்ச்சியும் நடந்ததில்லை.
இதனால் ராமதாஸ் தலைமையில் நடக்கும் மகளிர் மாநாட்டிற்கு அன்புமணி வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் இந்த மகளிர் மாநாட்டில் சுமார் 3 லட்சம் மகளிரைப் பங்கேற்க வைக்க ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். இதற்கான பணிகளை பாமக கெளரவத் தலைவர் ஜிகே மணியும், பாமக எம்எல்ஏ அருள் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே இந்த மகளிர் மாநாட்டில் ராமதாஸ் தனது மூத்த மகள் காந்திமதியை மேடையேற்ற வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அண்மையில் ராமதாஸ் தலைமையில் நடந்த பாமக செயற்குழு கூட்டத்தில் காந்திமதி பங்கேற்று இருந்தார். அப்போது மேடைக்குக் கீழ் அமர்ந்திருந்த அவருக்கு, சில நிமிடங்களில் ராமதாஸ்க்கு பின்பாக இருக்கை ஒதுக்கப்பட்டது.
அன்புமணியால் பாமகவில் பதவி கொடுக்கக் கூடாது என்று எதிர்க்கப்பட்ட முகுந்தனின் தாய் தான் காந்திமதி. இதனால் மகனின் இடத்தில் மகளைக் கொண்டு வர ராமதாஸ் முடிவு செய்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது. இதனால் மகளிர் மாநாட்டில் ராமதாஸின் நடவடிக்கை மற்றும் பேச்சு மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications