குருவை சிறையில் அடைத்தவர்களுக்கு வன்னியர்கள் பாடம் புகட்டுவார்கள்.. ராமதாஸ்

காடுவெட்டி குருவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தைத் தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து தைலாபுரம் சென்ற குரு, டாக்டர் ராமதாஸை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
செய்யாத குற்றத்திற்காக ஜெ.குரு 8 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். இதற்கு காரணமானவர்களுக்கு வன்னிய மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
வன்னிய மக்கள், வன்னிய இளைஞர்கள், பா.ம.க.வினர் மீது தமிழக அரசு, போலீசை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. காவல்துறை என்பது பொதுவாக அனைத்து மக்களுக்கும், உடைமைகளுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு தர வேண்டிய துறையாகும். ஆனால் இந்த ஆட்சியில் எந்தவித காரணமும் இல்லாமல் யாரையும் கைது செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.
தமிழக அரசு என்னை 12 நாட்கள் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தது. பின்னர் வெளியே வந்தவுடன் அறுவை சிகிச்சை பெற்ற நான், மிகுந்த வேதனையோடு இருந்தேன். வன்னியர்கள் 134 பேர் சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் ஓரளவிற்கு ஆறுதலடைந்தேன்.
தற்போது உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி சிறையில் இருந்து குரு விடுதலை செய்யப்பட்டதால் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். எத்தனை அடக்கு முறைகள் என்றாலும் நானும், குருவும் அஞ்சமாட்டோம். இதற்கெல்லாம் வன்னிய மக்கள் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications