முதல்வர் ஓபிஎஸ் கரத்தை வலுப்படுத்துவோம்.. வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. பேட்டி
வாசுதேவநல்லூர் தொகுதி எம்எல்ஏ மனோகரன் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதாக வாதுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதனையடுத்து சசிகலா தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 131 எம்எல்ஏ-க்கள் பங்கேற்றதாக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்திருந்தார். இதனிடையே சட்டமன்றத்தில் தனக்கு உள்ள பலத்தை உறுதியாக நிரூபிப்பேன் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை தற்போது ஒவ்வொன்றாக உயர்ந்து வருகிறது. சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ மாணிக்கம், கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஆறுக்குட்டி, ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ மனோரஞ்சிதம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த வாசுதேவநல்லூர் தொகுதி எம்எல்ஏ மனோகரன் கூறுகையில், கட்சியினர் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவும் ஓ.பி.எஸ்-க்கு இருப்பதால் அவரே முதல்வராகத் தொடர வேண்டும். அவரது கரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவருக்கு ஆதரவு அளித்துள்ளேன் என்றார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.