சிதம்பரம் தீட்சிதர்களிடம் ஆதரவு கேட்ட திருமாவளவன்; மாலை அணிவித்து மரியாதை!!
சிதம்பரம்: லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி தீட்சிதர்களிடம் ஆதரவு கேட்டார். தீட்சிதர்களும் திருமாவளவனுக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
சிதம்பரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரான தொல். திருமாவளவன், சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்களிடம் இருந்து அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறவர். தற்போது லோக்சபா தேர்தல் நடைபெறுவதால் சிதம்பரத்தில் உள்ள தீட்சிதர்களிடம் ஓட்டு சேகரிக்க நடராஜர் கோயிலுக்கு நேற்று திருமாவளவன் சென்றார்.
கிழக்கு கோபுரம் வழியாக..
சிதம்பரம் நடராஜர் கோயிலின் கிழக்கு கோபுர வாயில் வழியாக வந்த திருமாவளவன் வந்த போது பொது தீட்சிதர்கள் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிற்றம்பல மேடையேறி வழிபாடு
திருமாவளவன் சிற்றம்பல மேடையேறி ஸ்ரீசிவகாமசுந்தரி சமேதஸ்ரீமந் நடராஜப் பெருமானை தரிசித்தார். பொதுதீட்சிதர்தள் சிறப்பு தீபாராதனை செய்து திருமாவளவனனுக்கு பிரசாதம் வழங்கினர்.
தீட்சிதர் கமிட்டிக்கு மரியாதை
அதைத்தொடர்ந்து கோயில் பொதுதீட்சிதர்களின் அலுவலகத்திற்கு சென்று தீட்சிதர்களின் கமிட்டி நிர்வாகிகளுக்கு மரியாதை செலுத்திய திருமாவளவன், கோயில் வருகை பதிவேட்டில் தனது கருத்தை பதிவுசெய்தார்.
மகிழ்ச்சியளிக்கிறது
பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 2004, 2009 ஆகிய தேர்தல்களின் போது நடராஜர் கோயிலில் வணங்கி, ஆதரவு திரட்டினேன். தீட்சிதர்கள் என்னை அழைத்துச்சென்று தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கினர். அதேபோன்று இத்தேர்தலிலும் நடராஜர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு, ஆதரவு திரட்ட வந்தேன். தீட்சிதர்கள் என்னை வரவேற்று அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது.
தீட்சிதர்களுடன் தனிப்பட்ட முரண்பாடு இல்லை..
அனைத்து கோயில்களையும் அரசுடமையாக்க வேண்டும் என்பது எனது கொள்கை, அதன்படி நடராஜர் கோயிலை அரசு ஏற்ற போது ஆதரவு தெரிவித்தேனே தவிர, எனக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எந்தவித முரண்பாடும் கிடையாது என்றார் திருமாவளவன்.
யாருக்கு ஓட்டு?
இதனிடையே தீட்சிதர்கள் வரும் தேர்தலில் அதிமுக அல்லது பாஜகவை ஆதரிப்பது குறித்து விவாதித்து வருகின்றனர். தற்போது திருமாவளவன் ஆதரவு கேட்டு வந்திருப்பதால் தீட்சிதர்களின் வாக்குகள் சிறிய அளவில் பிரியலாம் என்று கூறப்படுகிறது.