இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பைக் கைவிட்டு தமிழை ஆட்சி மொழியாக்க விசிக வலியுறுத்தல்
சென்னை : 1968-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது தீக்குளித்து தமது இன்னுயிரை ஈகம் செய்த மொழிப்போர்த் தியாகிகளைக்கொண்ட பெருமைக்குரிய மாநிலம் தமிழ்நாடு. எனினும், தமிழ் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் இந்தியைத் திணிப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தற்போது இந்தியைப் பயிற்று மொழியாகக்கொண்ட நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் திறக்கவேண்டும் என்கிற ஒரு நெருக்கடியை மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கின் மூலமாகஉருவாக்கியிருக்கிறார்கள்.
இவ்வாறு, தமிழ்நாட்டின்மீதும் இந்தி பேசாத பிற மாநில மக்களின் மீதும் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்கு மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சி இந்திய அளவில் மிக மோசமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என இம்மாநாடு எச்சரிக்கையோடு சுட்டிக்காட்டுகிறது.
இந்நிலையில், அரசியலமைப்புச்சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் மத்தியில் ஆட்சி மொழியாக்கவேண்டும்; அதுவரை ஆங்கிலமே அலுவல் அல்லது இணைப்பு மொழியாக நீடிக்கவேண்டும். உச்சநீதிமன்றத்தின் அலுவல் மொழியாகவும் ஆங்கிலமே இருக்கவேண்டும். உயர்நீதிமன்றங்களின் அலுவல் மொழியை அந்தந்த மாநிலங்களே தீர்மானித்துக்கொள்ள அதிகாரம் வழங்கப்படவேண்டும். மாநில அலுவல் மொழியாக அந்தந்த மாநில மொழியே இருக்கவேண்டும். மாநிலத்தில் பணியாற்றும் மத்திய அரசுப் பணியாளர்கள் அந்தந்த மாநில மொழிகளில் தேர்ச்சிபெற்றிருக்கவேண்டும்.
எனவே, இந்தியை மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 343 ம், இந்தி மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு பாடுபடவேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 351 ம் நீக்கப்படவேண்டும்; எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் சமமாக நடத்தவேண்டும்; அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.