இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை... விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
சென்னை: இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இதில் அமெரிக்காவின் நிலைபாட்டைக் கண்டித்தும் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து உள்நாட்டு விசாரணையே போதுமானது என்கிறது அமெரிக்கா. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானத்தைக் கொண்டுவர உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது உலகத் தமிழர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழகத்தில் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஐ.நாவின் நிலைக்கு எதிராக போராட்டங்களை நடத்தி உள்ளன.

இந்நிலையில் இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை வகித்தார்.

நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிரகா முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அமெரிக்கா தூதரகத்தில் அவமரியாதை
இந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு சென்று 2 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அரசியல் மற்றும் பொருளாதார பிரிவு அலுவலரிடம் திருமாவளவன் வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
அமெரிக்க தூதரகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார பிரிவு அலுவலர் எங்களை சந்தித்தார். நாங்கள் வழங்கிய மனுவை பெற்றுகொண்டார்.
எங்களுடைய கோரிக்கைகளை மேலிடத்திற்கு அனுப்பி வைப்பதாக உறுதியளிதிருக்கிறார். நாங்கள் 2 கோரிக்கைகளை முன்னிறுத்தி இருக்கிறோம்.

ஏற்கனவே அமெரிக்க எடுத்த நிலைப்பாடான போற்குற்றதிற்கு எதிரான சர்வதேச விசாரணையை கைவிடக்கூடாது என்பதும் காணாமல்போனவர்களின் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் இந்த மனுவிலே நாங்கள் விடுத்திருக்கிற கோரிக்கைகள்.
இதை மேலிடத்திற்கு நாங்கள் தெரியப்படுத்துவோம் என்று அரசியல் மற்றும் பொருளாதார பிரிவு அதிகாரி எங்களிடத்தில் கூறினார். ஆனால் எங்களை வரவேற்ற முறை மிகவும் அநாகரியமானது. மக்களுக்கு பணியாற்றக்கூடிய அரசியல் கட்சி தலைவர்களை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் என்ற தகுதியுடையோர்களை உரியமுறைப்படி வரவேற்று இந்த மனுவை அவர்கள் பெறவில்லை.
வரவேற்பு வாசலிலேயே நின்றுகொண்டு எங்கள் மனுவை பெற்றுகொண்டார். நாங்கள் சொன்ன கோரிக்கையை கேட்டுகொண்டார்.
மதிமுக தலைவர் வைகோ அவர்களை இதேபோல வரவேற்பு வாசலிலேயே நிறுத்தி அவர்கள் இடத்தில் மனுவை பெற்றுகொண்டதாகவும் அதே முறைப்படிதான் உங்களை நாங்கள் வரவேற்கிறோம்; மனுவை பெற்றுகொண்டோம் என்று எங்களிடத்திலே கூறினார்கள்.
இந்த நடைமுறையை வன்மையாக விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கண்டிக்கிறேன். ஒரு அடிப்படை நாகரியத்தைக்கூட கடைப்பிடிக்க தயாராக இல்லை அமெரிக்க தூதரகம் என்பது வேதனையளிக்கிறது. ஆகவே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் இந்த அணுகுமுறையை கண்டிக்கிறோம் .
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications