ஆக. 19-ல் காவிரி டெல்டா முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு- தொல். திருமாவளவன்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி வரும் 19-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் விவசாய சங்கங்கள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சொல்லவொண்ணா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை நிலைநாட்டவும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்கவும் மத்திய அரசுக்கு போதிய அழுத்தத்தைத் தமிழக அரசு தரவில்லை.
அனைத்து கட்சி குழு
இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்துச்சென்று பிரதமரைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை பலமுறை வற்புறுத்தியுள்ளோம். பிற அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
பேசவே இல்லையே..
ஆனால் தமிழக அரசு அந்தக் கோரிக்கையை அலட்சியப்படுத்தி வருகிறது. விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளைக்கூட அழைத்துப் பேச மறுக்கிறது.
டெல்டா பந்த்
இந்நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை உறுதிசெய்யும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும், விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும் நாகை, தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர் ஆகிய ஆறு டெல்டா மாவட்டங்களில் கடையடைப்புப் போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
சிறுத்தைகள் ஆதரவு
டெல்டா விவசாயிகளின் உயிராதாரமான உரிமையைக் காப்பதற்கான இந்தக் கடையடைப்புப் போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.