பறவைகள் இல்லாத சரணாலயமாக மாறிய வேடந்தாங்கல்
சென்னையில் இருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தூரத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இந்த சரணாலயத்துக்கு உள்நாட்டில் இருந்து வரும் பறவைகளை தவிர்த்து, பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 16 வகையான பறவைகள் வருகின்றன.
இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் முதல் ஜூலை மாதம் வரை வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டிருக்கும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக மழை பொய்த்துப் போனதால் ஏரியில் பாதியளவு நீர் கூட நிரம்பவில்லையாம்.
தண்ணீர் இல்லாததால் பறவைகளின் வருகை குறைந்து போய் தற்போது பறவைகள் முற்றிலும் இல்லாமல் சரணாலயம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. பறவைகளை பார்க்க வேடந்தாங்கலுக்கு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குடும்பத்தோடு சுற்றுலா பயணிகள் வருவார்கள். பறவைகள் இல்லாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர்.
இதையடுத்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குனர் கே.எஸ்.வி.டி. ரெட்டி, வன உயிரின காப்பாளர் கீதாஞ்சலி ஆகியோரின் உத்தரவின் பேரில் நேற்றுடன் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டது. மூடப்பட்ட சரணாலயம் நவம்பர் மாதத்தில் மீண்டும் திறக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.