செங்கொடி’த் தோழருக்கு வீரவணக்கம்... உமாநாத் மறைவுக்கு கி.வீரமணி இரங்கல்
சென்னை: களம் பல கண்டு, தியாகத் தழும்புகளை ஏற்ற தீரர் எனப் புகழ்ந்து செங்கொடித் தோழருக்கு வீரவணக்கம் என மார்க்சிஸ்ட் கட்சி மூத்தத் தலைவர் உமாநாத்தின் இழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்டு)யின் மூத்த தலைவர்களுள் ஒருவரான தோழர் உமாநாத் (92) இன்று மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
களம் பல கண்டு, தியாகத் தழும்புகளை ஏற்ற தீரர்! நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகவும் சிறப்பாகப் பணி யாற்றியவர்.
உமாநாத் அவர்களும், அவர் வாழ்விணையர் தோழர் பாப்பா உமாநாத் அவர்களும், தந்தை பெரியார் அவர்களிடத்திலும், நம்மிடத்திலும் மிகவும் அன்புப் பாராட்டியவர்கள்.
பொது வாழ்க்கையில் பண்பட்ட ஒரு பொதுவுடைமைவாதியைத் தமிழ்நாடு இழந்து விட்டது. எதையும், தக்க புள்ளி விவரங்களோடு துல்லியமாக பேசும் - எழுதும் வித்தகர்!
அவரது பிரிவால் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் சி.பி.எம். கட்சிக் கும், குடும்பத்தினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறு தலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருச்சி மாவட்டத் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்துவார்கள்.
‘செங்கொடி'த் தோழருக்கு வீரவணக்கம்!
-இவ்வாறு அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications