தக்காளி விலை "தள தள".. வெங்காயம் "கலகல".. அதிகரித்த காய்கறி வரத்தால் விலை சரிவு!
சென்னை: தமிழகத்தில் மழைக்கு பின்பான காய்கறி வரத்து அதிகமானதால் காய்கறிகளின் விலை தாறுமாறாக குறைந்துள்ளது. முக்கியமாக தக்காளியின் விலை ரூபாய் 15க்கு இறங்கி விட்டது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் வரை காய்கறி விலை அதிகமாக இருந்தது. மழை வெள்ளம் காரணமாக பல இடங்களில் நிறைய சேதங்கள் ஏற்பட்டதால் காய்கறி விளைச்சல் வெகுவாக பாதித்தது.
தற்போது சகஜ நிலை திரும்பி வெயில் அடிப்பதால் காய்கறி விளைச்சல் மீண்டும் அமோகமாகிவிட்டது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில், இருந்து லாரி லாரியாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வருகிறது.
தாறுமாறாக குறைந்த விலை:
இதற்கு முன்பு 250 லாரிகளில் காய்கறிகள் வரும். ஆனால் இப்போது 300 க்கும் அதிகமாக லாரிகளில் காய்கறிகள் வந்து இறங்குகிறது. இதனால் கடந்த 10 நாட்களாக காய்கறி விலை வெகுவாக குறைந்து விட்டது.
தளதளவென குறைந்த தக்காளி:
தக்காளி 1 கிலோ நேற்று 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கோயம்பேட்டில் இன்று 2 கிலோ தக்காளி 15 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 1 கிலோ வெங்காயம் ரூ.15க்கு விற்கப்பட்டு வருகின்றது.
இதுக்கு மேல குறைக்க முடியாது:
இன்னும் இதைவிட குறைவான விலைக்கு விற்றால் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் கட்டுப்படியாகாது என்பதால் விலையை குறைக்க முடியவில்லை என்றனர்.
5 ஆண்டுகளுக்கு பின்:
இதேபோல் அனைத்து காய்கறிகளும் விலை மலிவாகி விட்டது. முக்கியமாக வெங்காயமும், தக்காளியும் கிலோ 15 ரூபாய்க்கு விற்பனையாகின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காய்கறி விலை மலிந்துள்ளதாக கோயம்பேடு மார்க்கெட் ஆலோசகர் சவுந்தரராஜன் தெரிவித்தார்.
விலைப்பட்டியல் (1 கிலோ):
கத்தரிக்காய் - ரூ.15
பீன்ஸ் - ரூ. 20
அவரை -ரூ. 25
கேரட் - ரூ.30
உருளை - ரூ.18
பீட்ரூட் - ரூ.20
கோஸ் - ரூ.10
காலிபிளவர் - ரூ.20
பச்சைப்பட்டாணி - ரூ.40
பாகற்காய் - ரூ.25
கொத்தவரங்காய் - ரூ.20
நூல்கோல் - ரூ.20
சிறு கிழங்கு - ரூ.40
கோவக்காய் - ரூ.25
முருங்கைக்காய் - ரூ.40
வெங்காயம் - ரூ.15