சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்.. கட்டணமின்றி ஜாலியாக பயணம்.. குஷியில் வாகன ஓட்டிகள்!
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை, திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதால் வாகனங்கள் கட்டணமின்றி இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளில் பயணிக்கையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி ஒவ்வொரு வாகனமாக கட்டணம் செலுத்தும்போது, தாமதம் ஏற்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
அதுமட்டுமல்லாமல் பணம் செலுத்த தாமதம் ஆகும்போது, போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதாகவும், பணப்பரிமாற்றத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஃபாஸ்டேக் முறை
இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பாக ஃபாஸ்டேக் (FASTAG) முறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களின் தேவை குறைந்தது. இதனால் ஆட்குறைப்பு நடவடிக்கையில் சுங்கச்சாவடி நிர்வாகம் தொடங்கியுள்ளது.

ஆட்குறைப்பு நடவடிக்கை
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சியில் 2009 முதல் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. இந்த சுங்கச்சாவடியில் 'ஃபாஸ்ட்டேக்' கட்டண வசூல் முறை வந்த பிறகு ஆட்குறைப்பில் சுங்கச்சாவடி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதில் ஊழியர்களில் 26 பேரை பணி நீக்கம் செய்துவது தொடர்பாக கடந்த செப்.29ம் தேதி நோட்டீஸ் வழங்கியது. அதில், வரும் அக்.1 முதல் வேலைக்கு வர வேண்டாம் என கூறியதாக தெரிகிறது.

ஊழியர்கள் போராட்டம்
இதனால் அதிருப்தியடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள், தமிழ்நாடு சுங்கச்சாவடி ஊழியர்கள் சம்மேளனத்தின் செயலாளர் கார்ல் மார்க்ஸ் தலைமையில் நேற்று முன்தினம் முதல் இந்த சுங்கச் சாவடியில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் சுங்கக் கட்டணம் பிடித்தமின்றி பயணித்து வருகின்றன.

கட்டணமின்றி பயணிக்கும் வாகனங்கள்
தற்போது சனி, ஞாயிறு, அதனைத் தொடர்ந்து பண்டிகை விடுமுறை என்பதால் வாகனங்கள அதிக அளவில் பயணிக்கும் சூழல் உள்ளது. ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் சுங்கச்சாவடி நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே வட்டாட்சியர் மணிமேகலை, காவல் உதவி கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் செங்குறிச்சி சுங்கச்சாவடிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மற்றும் சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

திருமாந்துறை சுங்கச்சாவடி
அதேபோல் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடியில் 30 பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பணியாற்றும் ஊழியர்களும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாததை அடுத்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அனைத்து வாகனங்களும் எந்தவித கட்டணமும் இன்றி அனுப்பப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் ஜாலியாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications