கூர்தீட்டிய அரசியல் விமர்சகரகாக திகழ்ந்தவர் சோ : வேல் முருகன் புகழாரம்
சென்னை: மரியாதைக்குரிய சோ மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
மூத்த பத்திரிகையாளர், அரசியல் ஆலோசகர் என பன்முகம் கொண்ட சோ ராமசாமி அதிகாலை காலமானார். அவருக்கு அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் என அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து சென்னையில் அவரது இல்லத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் சோ ராமசாமிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில் முதுபெரும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மரியாதைக்குரிய சோ ராமசாமி இன்று சென்னையில் காலாமானர் என்பது பெருந்துயரத்தைத் தருகிறது.
சட்ட ஆலோசகராக, நடிகராக, பத்திரிகையாளராக, கூர்தீட்டிய அரசியல் விமர்சகரகாக வாழ்நாளில் திகழ்ந்தவர் சோ ராமசாமி . அவரது கருத்துகள் எதுவும் நமக்கு உடன்பாடானது அல்ல என்றபோதும் பன்முக ஆளுமைத்தன்மையோடு திகழ்ந்த மரியாதைக்குரியவர்.
ஆண்டு தோறும் ஜனவரி மாதம் சோ நடத்தி வந்த துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வாகவே இருந்து வந்தது. தமிழகத்தின் அரசியல் மாற்றங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் பல நேரங்களில் மையமாகவும் இருந்திருக்கிறார் மறைந்த மரியாதைக்குரிய சோ.
மரியாதைக்குரிய சோ மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது" என்று வேல்முருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications