வேலூர் மாணவி கொலை குறித்து சிபிஐ விசாரணை தேவை... சாலை மறியலில் குதித்த மக்கள்
வேலூர்: வேலூர் ஆறாம் வகுப்பு பள்ளி மாணவி கொலை வழக்கில் சரியான நியாயம் வேண்டும் என்று கேவி.குப்பம் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அங்கு 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அம்மாணவி படித்து வந்த பள்ளியில் வருகைப் பதிவேடுகளும் சரியாக பராமரிக்கப்படவில்லை. அப்போதே ஆசிரியர்கள் மாணவர்களைப் பற்றி பெற்றோரிடம் அவர்களின் தவறான நடத்தைப் பற்றி தெரிவித்திருந்தால் இந்த கொடூரம் நடந்திருக்காது என்றும் மாதர் சங்கங்கள் தெரிவித்து வருகின்றன.
போலீஸ் மேல் குற்றச்சாட்டு:
போலீஸ் பாரபட்சமாக நடப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் பதற்ற நிலை காணப்படுகிறது.
மாணவி கீர்த்திகா:
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது இரண்டாவது மகள் கீர்த்திகா மாச்சனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
தந்தை போலீசில் புகார்:
நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு வீட்டில் இருந்து சைக்கிளில் பள்ளிக்குச் சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பல இடங்களிலும் தேடினர். ஒரு தகவலும் கிடைக்காததால் கே.வி.குப்பம் போலீசில் விஜயகுமார் புகார் செய்தார்.
மாணவியின் சடலம்:
இந்நிலையில் நேற்று காலை 8:00 மணிக்கு சாச்சனூர் அருகே கல்யாண பெரியாங்குப்பத்தில் உள்ள ஒரு மாந்தோப்பில் கை , கால்கள் மற்றும் வாய் ரிப்பனால் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் மாணவி பிணமாக கிடந்தது தெரியவந்தது. போலீசாரும் பெற்றோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பலாத்காரம் செய்து கொலை:
தலையில் பாட்டிலால் தாக்கப்பட்டும், கழுத்தை நெரித்தும், மார்பு முதல் வயிறு வரை கத்தியால் குத்தியும் மாணவி படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டு பெற்றோர் கதறி அழுதனர். மருத்துவ பரிசோதனைக்கு பின் விவரம் தெரியவரும். கொலை செய்தவர்களை நெருங்கி விட்டோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவர் என போலீசார் தெரிவித்திருந்தனர்.
எல்லா இடங்களிலும் விசாரணை:
காட்பாடி டி.எஸ்.பி. மதிவாணன் தலைமையில் கொலையாளிகளை பிடிக்க இரு தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்று வந்தது. மேலும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கே.வி.குப்பம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் மது குடித்தவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை செய்தனர்.
இரண்டு மாணவர்கள் கைது:
அந்நிலையில் மாணவி மாயமான நாள் முதல் தலைமறைவான அதே பள்ளியில் படித்த 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரையும் போலீசார் தேடி வந்தனர். தலைமறைவான மாணவன் சரண்ராஜை நேற்று இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், அவருடைய பையில் இருந்து கீர்த்திகாவின் கொலுசு கண்டறியப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் புகார்:
இந்நிலையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்ட பெற்றோர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை ஒருவர் மட்டும் செய்திருக்க முடியாதும் எனவும் 3 முதல் 4 பேர் சேர்ந்து தான் செய்திருக்கக் கூடும் எனவும் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தீவிரமடையும் போராட்டம்:
மேலும் போலீசார் பாரபட்சம் பார்ப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதன் காரணமாக வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சாலை மறியலில் மக்கள்:
தங்களின் கோரிக்கை ஏற்கப்படும் வரை மாணவியின் உடலை வாங்கப் போவதில்லை என கூறி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கலெக்டர் மீது குற்றச்சாட்டு :
மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் மாவட்ட கலெக்டர் எந்த நடவடிக்கையும் எனக்கூறி பெண்கள் அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் கே.வி.குப்பம் போலீஸ் ஸ்டேஷன் முன் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வியாபாரிகள் கடையடைப்பு:
இவர்களுக்கு ஆதரவாகவும், சம்பவ இடத்திற்கு ஆட்சியர் வராததை கண்டித்தும் கே.வி.குப்பம் பகுதி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் ஈடுபட்டுள்ளனர். இதனால் கே.வி.குப்பம் பகுதியில் பதற்றம் நீடித்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு:
பதற்றம் நிலை காரணமாக கொலை செய்யப்பட்ட மாணவி படித்த மாச்சனூர் உயர்நிலைப் பள்ளிக்கும், வேப்பங்நேரி ஆண்கள் பள்ளி மற்றும் கே.வி.குப்பம் பெண்கள் ஆகியவற்றிற்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.