இடி சத்தம் கேட்டு அதிர்ச்சியில் குடியாத்தம் பாட்டி மரணம்
வேலூர்: குடியாத்தம் அருகே இடிச் சத்தம் கேட்டு அதிர்ச்சியில் 75 வயது பாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சனிக்கிழமையன்று பரவலாக மழை பெய்தது.
இதனால் வாணியம்பாடி பேருந்து நிலையம் மற்றும் உதயேந்திரன் பேரூராட்சி பகுதி சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.
கனமழை காரணமாக வாணியம்பாடியை அடுத்த கோவிந்தாபுரம் பகுதியில் சில குடிசை வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
அதேபோல், குடியாத்தம் பரவக்கல்லை அடுத்த பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரங்கம்மாள் (75) என்ற பெண்மணி, செம்பேடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது பலத்த இடி சத்தம் கேட்டதில் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.